மீண்டும் மம்முட்டியின் உதவியை நாடிய லிங்குசாமி..!


2005ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பலர் நடிப்பில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘சண்டக்கோழி’. அறிமுகமாகி மூன்றாவது படத்திலேயே விஷாலை ஆக்சன் ஹீரோவாக கமர்ஷியல் தளத்தில் உட்கராவைத்ததில் இந்தப்படத்திற்கு பெரும்பங்கு உண்டு..

இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகளில் விஷால் மற்றும் லிங்குசாமி இருவரும் ஈடுபட்டு வந்தார்கள். ஆனால் திடீரென படம் கைவிடப்பட்டது என அறிவித்தார் விஷால்.. ஆனால் அதன் பின் என்ன நடந்ததோ தெரியவில்லை. மீண்டும் படம் டேக் ஆப் ஆக இருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

அஞ்சான் படத்தின் தோல்வியை தொடர்ந்து லிங்குசாமிக்கு வேறு எதுவும் படம் கிடைக்கவில்லை. சண்டக்கோழி-2 வேறு இன்னும் உறுதியாகாமல் இருப்பதால் இன்னொரு படத்திற்கான வேலையையும் சைடில் பார்த்து வருவோமே என தயாராகி வருகிறார் லிங்குசாமி.

இந்தமுறை அவர் ஹீரோவாக நடிக்க கேட்டிருப்பது மலையாள மெகாஸ்டார் மம்முட்டியைத்தானாம்.. உடனே ஆச்சர்யப்பட்டு விடாதீர்கள்.. லிங்குசாமியின் முதல் பட ஹீரோ மம்முட்டிதானே.. அவரை வைத்து தானே ஹிட் கொடுத்து திரையுலகில் நுழைந்தார். அதனால் சரிவை நோக்கி செல்லும் இந்த நேரத்தில் மம்முட்டியிடம் தனக்கு ஒரு படம் பண்ணித்தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளாராம் லிங்குசாமி..

தற்போது இயக்குனர் ராம் டைரக்சனில் ‘பேரன்பு’ படத்தில் நடித்துவரும் மம்முட்டி, லிங்குசாமிக்கு ஒகே சொல்லிவிட்டதாக தெரிகிறது.