தமன்னாவை அழவைத்தார் பிரபுதேவா..! புகார் கொடுத்தார் தயாரிப்பாளர்..!


சமீபத்தில் தேவி’ படத்திற்காக பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.. இதில் கதாநாயகியாக நடித்துள்ள தமன்னாவும் கலந்துகொண்டார். இதன் நாயகனும் படத்தின் நடன இயக்குனருமான பிரபுதேவா, தமன்னாவை பற்றியும் அவரது அர்ப்பணிப்பு உணர்வு பற்றியும் மேடையில் பேசப்பேச ஆனந்தக்கண்ணீர் வடித்துள்ளார் தமன்னா.. ஆனால் இதே மேடையே அவருக்கு வேறு சிக்கலையும் இழுத்து வந்துவிட்டது.

பொதுவாக முன்னணி நடிகைகள் எல்லோருமே தங்களது படங்களின் விழாக்களில் கலந்துகொள்வது இல்லை தான்.. அதேசமயம் தெலுங்கில் நடித்தால் மட்டும் தவறாமல் கலந்துகொள்வார்கள் என்பது வேறு விஷயம்.. தமன்னா முழுவதும் அந்தமாதிரி ஆள் இல்லையென்றாலும் ஒருசில படங்களின் புரமொஷன்களை தவிர்த்து விடுவார்..

கடந்த ஒரு வருடத்தில் கவனித்து பார்த்தால், பாகுபலி, தோழா, இப்போது தேவி ஆகிய படங்களின் இசைவெளியீட்டு விழா, பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார் தமன்னா. இவை அனைத்துமே தமிழ், மற்றும் தெலுங்கில் ஒரே நேரகுதில் வெளியான, வெளியாகின்ற படங்கள் என்பதும், இதன் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர்கள் எல்லாம் பெரிய ஆட்கள் என்பதும் தான் தமன்னா இந்த விழாக்களில் கலந்துகொள்ள காரணம்..

அதேசமயம் தமிழில் மட்டுமே வெளியான விஜய்சேதுபதியுடன் அவர் நடித்த தர்மதுரை படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தமன்னா கலந்துகொள்ளவில்லை.. சரி.. அப்போது அவருக்கு ஏதோ பிரச்சனை அதனால் அவர் வரவில்லை என சாதாரணமாக எடுத்துக்கொண்டார்கள்.. ஆனால் தமன்னா இப்போது தேவி படத்தின் புரமோஷன்களில் கலந்து வருவதை பார்க்கும்போது தமன்னாவின் இரட்டை வேடம் நமக்கே தெளிவாக தெரிகிறது..

அப்படி இருக்கையில் நல்ல மனம் படைத்த அதேசமயம் ரப் அன்ட் டப் தயாரிப்பாளரான ‘தர்மதுரை’ படத்தின் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷுக்கு இது புரியாதா என்ன..? தேவி படத்திற்கு ஒரு நியாயம்.. தர்மதுரை’க்கு ஒரு நியாயமா என பொங்கி எழுந்தவர், தற்போது தமன்னா மீது தயாரிப்பளர் சங்கம் மற்றும் நடிகர்சங்கத்தில் புகார் கொடுத்துள்ளாராம்.