“இப்போ போறோம்… ஆனா திரும்பி….” ; விஷால்- தயாரிப்பாளர் சங்க லடாய்..!


விஷாலை பொறுத்தவரை தனது படங்கள் மட்டுமின்றி வேறு எந்த நடிகரின் படங்களும் திருட்டு விசிடியில் வெளியாகாமல் தடுக்கவும், அப்படி வெளியானால் வெளியிட்டவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்கவும் முழு முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.. ஆனால் பணம் போட்ட முதலாளிகளான தயாரிப்பாளர்கள் தரப்பு சும்மா புலம்புகிறார்களே தவிர சங்கம் மூலமாக களத்தில் இறங்குவதில்லை என்பதில் ஒரு தயாரிப்பாளராக விஷாலுக்கு ரொம்பவே வருத்தம் உண்டு..

இதை அவ்வப்போது கோடிட்டு காட்டி சில இடங்களில் பட்டும் படாமல் பேசிவந்த விஷால், சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை கொஞ்சம் காட்டமாகவே விமர்சித்து விட்டார்.. சும்மா இருக்குமா தயாரிப்பாளர் சங்கம்..? உடனே களத்தில் இறங்கிவிட்டது..

திருட்டு விசிடியை தடுக்கவா என உடனே நினைத்து விடாதீர்கள்.. அப்படி இருந்தால் தான் பரவாயில்லையே.. அதற்கு பதிலாக விஷாலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து கூட்டம் போட்டு தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள்.. இந்த தீர்மானத்தின்படி விஷால் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்காவிட்டால், அவர் தற்போது நடித்து வரும் ‘கத்திச்சண்டை’ படத்திற்கு…….

படத்திற்கு..? ஒத்துழைப்பு தரமாட்டோம் என சொல்லி இருப்பார்கள் என நினைப்பீர்கள்.. அதுதான் இல்லை.. ‘கத்திச்சண்டை’க்கு அடுத்த படத்திலிருந்து ஒத்துழைப்பு தரமாட்டோம் என முடிவெடுத்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்களாம். அதாவது வடிவேலு பாணியில் “இப்போ போறோம்.. ஆனா திரும்பி….

திரும்பி…..?

திரும்பி வரமாட்டோம்னு சொன்னோம்” என்று சொன்னாலும் சொல்வார்களோ..?

விஷாலிடம் கேட்டாலோ, என்கிட்டே இன்னும் எழுத்து பூர்வமா எதுவும் வரலை.. வரட்டும் பார்க்கலாம் என்கிறாராம்.