முன்னணி நடிகர்களிடம் நம்பிக்கையை இழந்துவரும் அனிருத்..!


பதவி வரும்போது பணிவு வரவேண்டும் தோழா என எம்.ஜி.ஆர் பாடிச்சென்றுள்ளார். இசையமைப்பாளர் அணிருத்திடம் வெளிப்பார்வைக்கு பணிவெல்லாம் நன்றாகவே தெரிகிறது. ஆனால் தான் மிகப்பெரிய இசையமைப்பாளர் ஆகிவிட்டோமோ என்கிற பந்தா தான் கூடிவிட்டது. இரண்டு விஷயங்கள் அதை மெய்ப்பிக்கின்றன..

அஜித்தின் வேதாளம், விவேகம் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்த அனிருத்துக்கு அவரது விசுவாசம் படத்தில் வாய்ப்பு இல்லை. விவேகம் படத்துக்கு இசையமைத்தபோது குறிப்பிட்ட காலத்தில் பாடலை கொடுக்காமல் அநியாயத்துக்கு அலையவிட்ட அனிருத் பின்னணி இசையமைக்கும்போதும் அவ்வளவாக ஈடுபாடு இல்லாமல் செய்தாராம்.

இந்த தகவல் அஜித் காதுக்குப் போனதால் விசுவாசம் படத்திற்கு கொஞ்சம் கூட விசுவாசமே இல்லாத அனிருத் வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம் அஜித். இப்போது சூர்யா நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படத்திலும் இதேபோன்ற ஒரு வேலையைத்தான் அனிருத் பார்த்துள்ளார். அதுவும் சமீபத்தில் நிரூபணமாகியுள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ பொங்கல் வெளியீடாக இம்மாதம் 12-ஆம் தேதி திரைக்கு வருகிறது. அனிருத் இசை அமைக்கும் இந்த படத்தின் பாடல்கள் ஜன., 3ஆம் தேதியே வெளியாவதாக இருந்தது. ஆனால் 4ஆம் தேதிக்கு மாற்றிவைத்து தான் விழாவை நடத்தினார்கள்.

காரணம் குறித்த நேரத்தில் பாடல்களை முடித்து கொடுக்க அனிருத் தவறிவிட்டாராம். அதனால் தான் பாடல் வெளியீட்டு விழா ஒரு நாள் தள்ளிப்போனதாக கூறப்படுகிறது. விக்னேஷ் சிவன் சிபாரிசால் தான் அனிருத்தை தங்கள் படத்துக்கு ஒப்புக்கொண்ட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவும் படத்தின் நாயகனான சூர்யாவும் இவரது செயலால் அப்செட்டாகியுள்ளனராம்.