அஞ்சல – விமர்சனம்


சுதந்திர போராட்ட காலத்தில் தனது தாத்தா தொடங்கிய 100 ஆண்டுகால பாரம்பரிய மிக்க அஞ்சல என்ற டீக்கடையை நடத்தி வருகிறார் பசுபதி. அந்த சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்கள் அனைவரும் தங்களுடைய சொந்தம் போலவே கருதி வருகிறார்கள். அதே ஊரில், சொந்தமாக டூவீலர் சர்வீஸ் சென்டர் வைப்பதற்காக வங்கியில் லோனுக்கு ஏற்பாடு செய்துவிட்டு, பணத்திற்காக காத்திருக்கிறார் விமல். இவரும், இவருடைய நண்பர்களும் பசுபதியின் டீக்கடையே கதியென்று கிடக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் ‘அஞ்சல’ டீக்கடையை இடிக்க நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்கிறது. அதற்கு பசுபதி இடைக்கால தடை வாங்குகிறார். ஆனால் பிரச்சனை அந்த ஊர் போலீஸ் அதிகாரி மற்றும் அரசியல்வாதி சுப்பு பஞ்சு மூலமாக வேறு ரூபத்தில் வருகிறது. .டீக்கடை நண்பர்களும் திசைக்கொன்றாக பிரிகிறார்கள்.. அது என்ன பிரச்சனை, இறுதியில் யாருக்கு ஜெயம் என்பது க்ளைமாக்ஸ்.

விமல், தனது எல்லா படங்களிலும் காட்டும் ட்ரேட் மார்க் பந்தாவை இதிலும் காட்டி நடித்திருக்கிறார். அந்த நக்கல் நடிப்பைத்தான் கொஞ்சம் மாற்றுங்களேன் பாஸ்.. அட்டகத்தி நந்திதாதாவின் நடிப்பில் நாளுக்கு நாள் மெருகு கூடிக்கொண்டே போகிறது. படத்தின் இன்னொரு ஹீரோ என்று சொல்லும் அளவுக்கு தன்னை நம்பி வந்த நண்பர்கள் தன்னை விட்டு செல்லும் போது பசுபதியின் நடிப்பு நெகிழ வைக்கிறது.

கோபி சுந்தர் இசையில் பாடல்கள் கேட்கும் விதமாக இருக்கிறது பின்னணி இசையும் அருமை தான். ரவி கண்ணனின் ஒளிப்பதிவு டீக்கடை மற்றும் கிராம மக்களின் யதார்த்த வாழ்க்கையை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது.

அஞ்சல என்ற பாரம்பரியமிக்க டீக்கடையை மையப்படுத்தித்தான் இப்படம் முழுக்க நகர்கிறது. ஓகேதான்.. ஆனால், டீக்கடைக்கும் அதை தங்களில் ஒருவனாக நம்பி இருக்கிறவர்களுக்கும் உண்டான நெருக்கத்தை இயக்குனர் தங்கம் சரவணன் இன்னும் கொஞ்சம் ஆழமாக காட்டியிருக்கலாம். சுதந்திர போராட்ட காலத்தில் வரும் காட்சிகளெல்லாம் ரசிக்க வைக்கிறது. கிளைமாக்ஸ் காட்சியை கொஞ்சம் மாற்றி அமைத்திருக்கலாம். \

அஞ்சல, விமல், பசுபதி, அட்டகத்தி நந்திதா, தங்கம் சரவணன், கோபிசுந்தர், ரவி கண்ணன், சுப்பு பஞ்சு