இயக்குனர் ஷங்கரிடம் நடிக்க வாய்ப்பு கேட்ட ‘அர்னால்ட்’

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், விக்ரம்-எமி ஜாக்சன் நடிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையில் பி சி ஸ்ரீராம் இயக்கத்தில் உருவான படம் “ஐ”. இந்த படத்தை ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன் தயாரித்திருக்கிறார்.

படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமாக நடந்தது…எப்போதும் பிரமாண்ட படங்களை தயாரிக்கும் ஆஸ்கார் பட நிறுவனம் ‘ஐ’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவையும் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்று கருதி ஹாலிவுட் நடிகர் அர்னால்டை சிறப்பு அழைப்பாளராக அழைத்திருந்தனர்.இதே விழாவுக்கு சூப்பர்ஸ்டார் ரஜினியும் வந்ததால் விழா இன்னும் சூடு பிடிக்க ஆரம்பித்தது ..

படத்தின் இசை தட்டை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் பெற்றுக்கொண்டார். இதே மேடையில் “ஐ” படத்தில் இடம் பெற்ற பாடல்கள் மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடந்தன. அதில் நடிகர் விக்ரம் மனித உடலுடனும், மிருக தலையுடனும் கூடிய ஒரு வித்தியாசமான தோற்றத்தில் மேடையில் தோன்றி ஆடி பாடினார்.

அடுத்த நிகழ்ச்சியாக 11 ஆணழகன்கள் மேடையில் தோன்றி இசைக்கேற்ப தங்கள் உடல் வலிமையை காட்டினார்கள். அதை பார்த்து ரசித்த அர்னால்டு எழுந்து நின்று கைதட்டினார்.ஆணழகன்களுடனும் கைக்குலுக்கி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

பிறகு பேசிய அர்னால்டு ..

ஆணழகன்களின் நிகழ்ச்சியை பார்த்து மகிழ்ந்தேன். அவர்கள் தங்கள் உடற்கட்டை நன்றாக வைத்திருக்கிறார்கள். நானும் அவர்களை போல் ஆணழகனாக இருந்து கதாநாயகனா உயர்ந்தவன். இன்று நான் வந்தது ஐ பட விழாவில் கலந்துகொள்வதற்காக மட்டும் அல்ல.டைரக்டர் ஷங்கர் உங்களிடம் நான் வேலைகேட்டு வந்ததாக நினைத்துக்கொள்ளுங்கள். என்னை வைத்து நீங்கள் எப்போது படம் எடுக்க போகிறீர்கள்.நான் ஷங்கர் படத்தில் நடிக்க விரும்புகிறேன். ‘கெனன் தி கிங்’ என்ற படத்தை என்னை வைத்து எடுக்க தயாரா?.

சென்னை மிக அழகான நகரம். இதற்கு முன்பு நான் இந்தியாவுக்கு ஏற்கனவே வந்திருக்கிறேன். ஆனால் இப்போது தான் முதன்முறையாக சென்னைக்கு வந்திருக்கிறேன்.சென்னை நகர மக்களின் அன்பு என்னை நெகிழ வைத்தது. அதனால் மீண்டும் நான் சென்னைக்கு வருவேன்..

என்று அர்னால்டு பேசினார் ..