உதவி இயக்குனர் பற்றாக்குறையால் நிற்கிறதா ‘தாரை தப்பட்டை’..?

பாலா படம் சூப்ப்ரஹிட்டாவதும், நடித்தவர்களுகோ, வேலை பார்த்தவர்களுக்கோ விருது கிடைப்பதும் எல்லாம் பார்க்கவும் கேட்கவும் நல்லாத்தான் இருக்கும். ஆனால் அவருடைய படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை அதில் வேலைபார்க்கும் டெக்னீசியன்களுக்கு டவுசர் கழண்டு விடும். குறிப்பாக உதவி இயக்குனர்கள் பாடுதான் படு திண்டாட்டம்..

பாலாவின் அசிஸ்டென்ட் என்கிற லேபிள் கிடைத்தால் மார்க்கெட்டில் எளிதாக தங்களது கடையை விரிக்கலாம் என்றுதான் பலர் பாலாவிடம் உதவி இயக்குனர்களாக சேருகிறார்கள். அதனால் ஷூட்டிங்ஸ்பாட்டில் பாலாவின் டார்ச்சர் தாங்கமுடியாமல் முனகிக்கொண்டே வேலை பார்ப்பது தான் வழக்கமாக நடக்கின்ற விஷயமாம். ஆனால் சமீபத்தில் ஒரு உதவி இயக்குனர் இந்த பூனைக்கு மணியை கட்டிவிட்டு போய்விட்டார் என்கிறார்கள்..

சில நாட்களுக்கு முன்பு ‘தாரை தப்பட்டை’ படப்பிடிப்பில் சசிகுமாருக்கு எலும்பு முறிந்ததால் படப்பிடிப்பை கேன்சல் செய்துவிட்டு சென்னைக்கு வந்துவிட்டார்கள் என செய்தி வெளியானதே. அதன் பின்னணியிலும் ஒரு உதவி இயக்குனர் கதைதான் இருக்கிறதாம். படப்பிடிப்பின் போது ஒரு உதவி இயக்குனரிடம் கோபத்தில் கையை நீட்டிவிட்டாராம்.

“ஏங்க.. உங்ககிட்ட தொழில் கத்துக்க வந்தே தவிர, அடிவாங்குரதுக்கு இல்ல” என் பொங்கி எழுந்த இயக்குனர் உடனே சென்னைக்கு பஸ் ஏறிவிட்டாராம். அதுமட்டுமல்ல, எதை பேசினாரோ, எதை சொன்னாரோ தெரியவில்லை இன்னும் சில உதவி இயக்குனர்களும் படப்பிடிப்பில் இருந்து கழன்று கொண்டார்களாம்.

ஆட்கள் பற்றாக்குறையுடன் படப்பிடிப்பை எப்படி நடத்துவது என பாலா அதிர்ச்சியான வேளையில் தான் சண்டைக்காட்சியில் சசிகுமாருக்கு அடிபட, அதை சாக்காக வைத்து படப்பிடிப்புக்கு லீவு விட்டுவிட்டார்களாம். இனி பாலா தனது ஈகோவை கழட்டி வைத்துவிட்டு போனவர்களையே திரும்ப அழைப்பாரா, இல்லை அமீர், சசிகுமாரிடம் வேலைபார்த்தவர்களில் சிலரை கடந் வாங்கி படத்தை தொடர்வாரா என்பது இனிமேல் தான் தெரியும்.