குற்றப்பரம்பரை பூஜை மூலம் பாலாவுக்கு வேகத்தடை போட்டார் பாரதிராஜா..!


நீயா, நானா என கடந்த சில நாட்களாக தனக்கும் பாலாவுக்கும் இடையே அறிவிக்கப்படாமல் நிலவி வந்த போட்டிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் இயக்குனர் பாரதிராஜா. ஆம்.. குற்றப்பரம்பரை கதையை பாலாவும் இயக்க இருப்பதாக கடந்த சில நாட்களாகவே பேச்சு அடிபட்டது..

ஆனால் ‘குற்றப்பரம்பரை’ கதையை, படமாக்கவேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. ஆனால் இத்தனை வருடங்களாக அதற்கு அவர் முயற்சி எடுக்கும்போதெல்லாம் ஏதாவது தடங்கல் ஏற்பட்டு அது நிறைவேறாத கனவாகவே இருந்தது.

சரி அதற்கும் ஒரு நேரம் வரும் என காத்திருந்த வேளையில் தான், இயக்குனர் பாலாவும் எழுத்தாளர் வேலா.ராமமூர்த்தி எழுதிய ‘குற்றப்பரம்பரை’ நாவலை படமாக்கும் முயற்சியில் இருக்கிறார் என தகவல் வெளியானது.

இதை இப்படியே விட்டால் சரிவராது என நினைத்த பாரதிராஜா நேற்று காலை இப்படத்தின் பூஜை மற்றும் படத்தொடக்க விழாவை உசிலம்பட்டி அருகிலுள்ள பெருங்காமநல்லூர் என்ற இடத்தில் விமரிசையாக நடத்தி தானே அந்த படத்தை முதல் ஆளாக இயக்கப்போவதை பறைசாற்றிவிட்டார்..