சரத்குமாரை உயர்த்துவதற்காக கேப்டனை கிண்டலடித்த ராதிகா..!

சினிமா பிரபலங்கள் மேடையில் பேசும்போது போகிற போக்கில் தங்களது பழைய அனுபவங்களை அள்ளி விடுவார்கள்.. அது கேட்கும் பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கலாம்.. ஆனால் அதில் சம்பந்தப்பட்டுள்ளவருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிடும் அபாயமும் இருக்கிறது. நடிகை ராதிகா நடிகர்சங்க பிரஸ்மீட்டின்போது பேசியபோது நம்ம கேப்டனை அப்படித்தான் கலாய்த்து பேசினார்.

அதாவது நடிகர்சங்கத்துக்காக ராதாரவியும் சரத்குமாரும் எவ்வளவு உழைத்துள்ளார்கள் என அவர்களது அருமை பெருமைகளை சொல்வதாக நினைத்து, சந்தடி சாக்கில் விஜயகாந்தை கிண்டலடித்துள்ளார்.. விஷயம் என்னவென்றால் விஜயகாந்த் வளர்ந்துவந்த காலகட்டத்தில், அதாவது ‘வீரபாண்டியன்’ என்கிற படத்தில் கேப்டனுடன் ராதிகா நடித்துக்கொண்டிருந்த சமயத்தில் அவரை நடிகர்சங்க தலைமை பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு ராதாரவி வற்புறுத்துவாராம்..

உடனே விஜயகாந்த், “அட அதெல்லாம் வேண்டாம்ப்பா.. நமக்கு இங்கிலீஷ்லாம் தெரியாது.. ஆள விட்ருப்பா” என சொல்வாராம்.(இதைத்தான் கேப்டன் பேசுவது போலவே மிமிக்ரி பண்ணி காட்டி பேசினார் ராதிகா).. அதன்பின் மீண்டும் சில வருடங்கள் கழித்து, அதாவது ராதிகா விஜயகாந்துடன் ‘நல்லவன்’ என்கிற படத்தில் நடித்துக்கொண்டிருந்த சமயத்தில் மீண்டும் ராதாரவி அவரை அழைத்தாராம்.

அதற்கும் முன்பு போலவே “அட அதெல்லாம் வேண்டாம்ப்பா.. நமக்கு இங்கிலீஷ்லாம் தெரியாது.. ஆள விட்ருப்பா” என சொன்னாராம். (இப்போதும் கேப்டன் போலவே மிமிக்ரி பண்ணினார் ராதிகா).. உடனே ராதாரவி, கேப்டனிடம், “அட.. சரத்குமார்னு புதுசா ஒரு ஆளு வந்திருக்கான்ப்பா.. அவரை வச்சு சமாளிச்சுக்கலாம்.. நீங்க நிக்கிறீங்களா” என திரும்பவும் கேட்டபோது, “அப்படின்னா நான் நிக்குறேன்” என்று ஒப்புக்கொண்டாராம்.

அதாவது சரத்குமாரின் மேதாவித்தனம் இல்லையென்றால் நடிகர்சங்க விவகாரங்களில் தனியாக விஜயகாந்தால் ஒன்றும் செய்திருக்க முடியாது என்கிற ரீதியில் தனது மூன்றாவது கணவரை புகழ்ந்து, விஜயகாந்தை கிண்டலடித்ததும், அவரைப்போலவே மிமிக்ரி பண்ணி ராதிகா பேசியதும் கொஞ்சம் ஓவராகத்தான் பட்டது.