சிவகார்த்திகேயன் மீது கோபம் மறந்த பாண்டிராஜ்


சிவகார்த்திகேயனை தமிழ் சினிமாவில் தான் இயக்கிய மெரினா படம் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் பாண்டிராஜ் தான். அதன் பின்பு அவரை வைத்து கேடி பில்லா கில்லாடி ரங்கா என்கிற படத்தையும் இயக்கினார் அதை அடுத்து சிவகார்த்திகேயன் மார்க்கெட் வேகமாக உயர ஆரம்பிக்க, அதன்பிறகு பாண்டிராஜால் சிவகார்த்திகேயனை நெருங்க முடியாமல் போய்விட்டது.

ஒரு கட்டத்தில் சிவகார்த்திகேயன் சம்பளமாக பத்து விரல்களை கேட்கிறார், அவரை வைத்து படம் எடுக்கும் அளவிற்கு நான் வசதியானவன் அல்ல என பொதுமேடையிலேயே தனது மனக்குமுறலை வெளிப்படுத்தினார் பாண்டிராஜ். சில வருடங்கள் உருண்டோடிவிட்ட நிலையில் சிவகார்த்திகேயன் மார்க்கெட் உச்சத்திற்கு போய், அதன்பிறகு தற்போது வேலைக்காரன், சீமராஜா பட தோல்விகளால் மீண்டும் சரிவை நோக்கி இறங்க ஆரம்பித்து உள்ளது.

இந்த நிலையில் கடைக்குட்டி சிங்கம் படம் வெற்றி மூலம் பாண்டிராஜ் முன்னணி இயக்குனர்கள் வரிசையில் இடம்பிடித்துவிட்டார். இதைத்தொடர்ந்து ஏற்கனவே சிவகார்த்திகேயனை வைத்து சன் பிக்சர்ஸ் படம் தயாரிக்க முடிவு செய்திருந்த நிலையில் அந்த படத்தை இயக்கம் பொறுப்பை இயக்குநர் பாண்டிராஜிடம் ஒப்படைத்துள்ளதாம்.

மிகப் பெரிய நிறுவனம், வளர்ந்து விட்ட நடிகர் என்பதையெல்லாம் கணக்கில் கொண்டு பழைய கோபத்தை எல்லாம் மறந்துவிட்டு சிவகார்த்திகேயன் படத்தை இயக்க தயாராகி வருகிறார் பாண்டிராஜ்.