“திருட்டுத்தனமாக படம் பார்க்க வெட்கமா இல்லை” ; ஹெச்.ராஜாவை விளாசிய விஷால்..!


மெர்சல் படத்தின் குற்றம் கண்டுபிடித்த பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தியேட்டரி பார்த்துவிட்டு குற்றம் சுமத்தினாரா, அலது வேறு யாரவது சொல்லக்கேட்டு அதைவைத்து குற்றம் சுமத்தினாரா என்பது தெரியாது.. ஆனால் அதே பாஜகவை சேர்ந்த ஹெச்.ராஜா தான் அந்தப்படத்தை இணையதளத்தில் பார்த்ததாக கூறியுள்ளார்.

ஏற்கனவே பைரசிகு எதிராக தீவிரமாக போராடி வரும் விஷால், இதை கட்டுப்படுத்துமாறு மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்து வரும் நிலையில் அதே மத்திய அரசில் ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகரான ராஜா இப்படி பட்டவர்த்தனமாக திருட்டுத்தனமாக படத்தை பார்த்ததாக சொன்னது விஷாலுக்கு அளவில்லாத கோபத்தை கிளப்பியுள்ளது. இதுகுறித்து ஹெச்.ராஜாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் விஷால்.

“ஒரு தேசியக்கட்சியின் தேசிய செயலாளர் பொறுப்பில் இருப்பவர் பொதுவெளியில் ‘நான் திருட்டுத்தனமாக இணையத்தில் புதிய படத்தை சட்டவிரோதமாக பார்த்தேன்’ என்று ஒப்புக்கொண்டிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. ஒருவேளை பைரசி எனப்படும் திருட்டுக் குற்றத்தை சட்டபூர்வமாகவே ஆக்கிவிட்டதா அரசுகள்? அதனால்தான் இந்த விஷயத்தில் சினிமா சிதைந்து அதை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை அழியவிட்டு வேடிக்கை பார்க்கின்றனவா இந்த அரசுகள் என்ற சந்தேகம் எழாமல் இல்லை.

எச். ராஜா அவர்களுக்கு… மக்கள் அறிந்த ஒரு தலைவராக இருந்துகொண்டு வெட்கமே இல்லாமல் எப்படி இப்படி பைரசியை ஆதரிக்கிறீர்கள்? உங்களை போன்ற ஒரு அரசியல்வாதி ஒரு படத்தின் திருட்டு பிரதியை பார்ப்பது என்பது ஒரு உண்மையான குடிமகனாகவும், கடின உழைப்பாளியாகவும், எதை செய்வதற்கு முன்பும் ஆழ்ந்து யோசித்து முடிவெடுப்பவனாகவும் எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இது மிகவும் தவறான முன்னுதாரணம். இது எங்கள் மனதை கடுமையாக பாதித்துள்ளது. தங்களது செயலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதோடு பைரசியை ஒழிக்க அரசு கடுமையான சட்டத்தை இயற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”

என அந்த அறிக்கையில் கூறியுள்ளார் விஷால்.