தயாரிப்பாளர்-இசையமைப்பாளர் விஷயத்தில் கௌதம் மேனனின் கண்கட்டு வித்தை

சிம்புவின் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை இயக்கி வருகிறார் கௌதம் மேனன். ஆனால் இப்படத்தின் போஸ்டர்கள், டீசர் வெளியான போதிலும், இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது குறித்து படக்குழுவினர் எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை.

சமீபத்தில் ‘மறுவார்த்தை பேசாதே’ எனும் பாடல் புரோமோ வெளியானதையடுத்து, இசையமைப்பாளர் யார் என்பது அறியாமல் ரசிகர்கள் மிகவும் குழப்பமடைந்துள்ளனர். ஒரு சிலர், புது இசையமைப்பாளரை கௌதம் அறிமுகப்படுத்தியுள்ளார் என்றும், இன்னும் சிலரோ, இல்லையில்லை, கௌதம் மேனனே இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார் என்றும் கூட சொல்லி வருகிறார்கள்..

இதற்கு முன் சிம்புவை வைத்து தான் இயக்கிய ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் போஸ்டர்களில் படத்தின் தயாரிப்பாளர் பெயரையே குறிப்பிடமால் தான் வெளியிட்டிருந்தார் கௌதம் மேனன். அதுகூட, அவருடைய சொந்த கம்பெனியின் கடன் பிரச்சனைகள் அந்தப்படத்திற்கு தடையாக நின்றுவிட கூடாது என்பதற்காகத்தான்.

ஆனால் இப்போது இசையமைப்பாளரின் பெயரை மறைப்பது சஸ்பென்சை கூட்டி, பப்ளிசிடியை அதிகரிப்பதும், பாடலுக்கான வரவேற்பு எப்படி இருக்கிறது என பல்ஸ் பார்ப்பதற்கும் தான் என்கிறார்கள் விபரம் அறிந்த சிலர்.