சுடச்சுட புகார் கொடுத்து அதிரவைத்த ‘ஜெமினி’ ராணி..!


திரையுலகில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்கள் குறிப்பாக நடிகைகள் ‘Me too’ என்கிற சோஷியல் மீடியா பிரச்சாரம் மூலமாக தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு, துன்புறுத்தல்களை வெளிப்படுத்தி வருகின்றனர். பதினைந்து வருடங்களுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவெல்லாம் பாடகி சின்மயி கதைவிட்டு வருகிறார்.

ஆனால் ஜெமினி படத்தில் ஒ போடு பாடலில் ஆடி புகழ்பெற்ற நடிகை ராணி தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நடிகர் மீது உடனுக்குடன் காவல்நிலையத்தில் புகார் அளித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

சென்னை செங்குன்றத்தில் தனியார் ஜவுளிக்கடை ஒன்றின் விளம்பர படப்பிடிப்பு நடைபெற்றது. இதில் நடிக்க வந்த நடிகை ராணி, படப்பிடிப்பின் போது நடிகர் சண்முகராஜன் மற்றும் இயக்குநர் ராஜ்கபூர் இருவரும் பாலியல் தொந்தரவு அளித்து தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து ராணியும், அவரது கணவர் பிரகாஷூம் செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனடிப்படையில் படப்பிடிப்பு தளத்திற்கு விரைந்த போலீசார், இயக்குநர் ராஜ்கபூர் மற்றும் நடிகர் சண்முகராஜனை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

இந்நிலையில் நடிகர் சண்முகராஜன் தன்னிடம் மன்னிப்பு கேட்டதால், புகாரை வாபஸ் பெறுவதாக நடிகை ராணி தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசும் போது, படப்பிடிப்பின் நிலை கருதி, தொழிலாளர்கள் நலன் கருதியும் புகாரை வாபஸ் பெற்றதாக கூறினார். புகார் திரும்பப் பெறப்பட்டதால், செங்குன்றம் காவல் நிலையத்திலிருந்து நடிகர் சண்முக ராஜன் மற்றும் ராஜ்கபூர் இருவரும் விடுவிடுக்கப்பட்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சண்முகராஜன், நடிகை ராணியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்போது தாக்குதல் ஏற்பட்டது. இந்நிலையில் இருதரப்புக்கும் இடையில் சமரசம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்பு நடிகை அமலாபால் இப்படி தனக்கு தொந்தரவு கொடுத்த ஒருவரை போலீஸில் சிக்க வைத்தார். இப்போது ஜெமினி ராணியும் இப்படி அதிரடியில் இறங்கியுள்ளதால், மற்ற நடிகைகளும் இப்படி உடனுக்குடன் செயலில் இறங்கினால் தான் பாலியல் டார்ச்சர் தரும் ஆண்களுக்கு பயம் வரும் என்கிறார்கள் திரையுலகை சேர்ந்தவர்கள்..