ஜிப்ஸி இசைவெளியீட்டு விழா ஹைலைட்ஸ்


வெறும் இரண்டே படங்களைத்தான் ராஜு முருகன் இயக்கி இருக்கிறார். ஆனால் அப்படங்கள் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. தற்போது ஜிப்ஸி படத்தை இயக்கி முடித்துள்ளார். ஜீவனுள்ள கதாபாத்திரத்தை சிதைக்காமல் அற்புதமாக வெளிப்படுத்தும் ஜீவா நடித்துள்ள இப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் சார்பாக S. அம்பேத்குமார் தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.

விழாவில் படக்குழுவினர் உள்பட பல்வேறு ஆளுமைகள் கலந்து கொண்டனர். படத்தின் பாடல்கள் ட்ரைலர் வெளியீட்டு விழாவோடு, நிருபமா தத் எழுதிய “துணிவின் பாடகன் பாந்த் சிங்” என்ற ஒரு புத்தகமும் வெளியீடப்பட்டது. இந்த நூலை தமிழில் கமலாலயன் மொழி பெயர்த்திருக்கிறார். ஒரு எளியமனிதன் அதிகாரத்தை எதிர்த்து நிற்கும் சாராம்சத்தை கொண்டது இப்புத்தகம். அதேபோல் ஜிப்ஸி படமும் அந்தக்களத்தை தாங்கி நிற்கக் கூடியதே.

இயக்குநர் சீனு ராமசாமி பேசும் போது, “எனக்கு ராஜு முருகன் மீது ஒரு தனிப்பட்ட அன்பு உண்டு. ஜனாதிபதியை விமர்சனம் செய்து ஜனாதிபதி விருது வாங்கியவர் அவர். ஒரு நேர்மையான பத்திரிகையாளராக பல பயணங்கள் மேற்கொண்டு பல அனுபவங்களைச் சேர்த்திருக்கிறார். இந்த ட்ரைலர் பார்த்து மிரண்டுவிட்டேன். ஜீவா தான் நடிக்க வந்த காலத்தில் இருந்து இப்படியான பெரிய பெரிய கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்து வருகிறார். ஜிப்ஸி என்றால் பயணி. அந்த வகையில் இப்படம் உலகத்தில் சிறந்த பயணமாக இருக்கும் என்று நம்புகிறேன். நாம் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அம்பேத்குமாரை சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்க வேண்டும்” என்றார்.

கரு.பழனியப்பன் பேசும்போது, “இந்த படத்தின் தயாரிப்பாளர் அம்பேத்குமார் பெரிதாக ஜெயிக்க வெண்டும். அவர் ஒரு சட்டமன்ற உறுப்பினர். ஒரு பையனுக்கு ஒரு மருத்துவ உதவி தேவைப்பட்டது. நான் தயங்கி கேட்டேன். ஆனால் அதை செய்து கொடுத்தார். நான் ஆஸ்பிட்டல் போகும் முன்பே அவர் அங்கிருந்தார். முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஆனவர் இப்படியான உதவிகளால் தான் இன்னும் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். மக்கள் மீது எப்படி ஈடுபாட்டோடு இருப்பாரோ அப்படித்தான் அவர் படங்களும் இருக்கும். ராஜு முருகன் அரசியல் பேசாமல் இருக்க மாட்டார். அதனால் அவரும் சட்டமன்றத்திற்குச் செல்ல வாழ்த்துகிறேன்” என்றார்

2டி.எண்டெர்டெயின்மெண்ட் ராஜசேகரபாண்டியன் பேசும்போது, “ராஜு முருகன் எதார்த்த மனிதர்களின் கதைகளைத் தொடர்ந்து படமாக்கி வருகிறார். இந்தப்படத்தை எடிட்ல சில காட்சிகளையும் பாடல்களையும் பார்த்தப் போது புதிய அனுபவமாக இர்ய்ந்தது. விழா நாயகன் சந்தோஷ் நாராயணன் சூப்பராக மியூசிக் பண்ணி இருக்கிறார். யுகபாரதிக்கு நான் ரசிகன். “ஜீவா ப்ரதர் உங்களை இவ்ளோ வித்தியாசமா காட்டி இருக்காங்கன்னா நீங்க எவ்ளோ உழைப்பைக் கொடுத்திருக்கீங்கன்னு தெரிகிறது” என்றார்

தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு பேசும்போது, “எளிய மனிதர்களின் வாழ்க்கையைப் படமாக்க வேண்டுமானாலும் அதற்கும் பொருளாதாரம் வேண்டும். தயாரிப்பாளர் இயக்குநருக்கு அதைச் செய்து கொடுத்து இருக்கார். அவருக்கு நன்றி. ஜீவா நல்ல உழைப்பாளி. இந்தப்படத்தை நான் தயாரிப்பதாக இருந்தது. எடிட்டர் ஒளிப்பதிவாளர் அனைவருக்கும் வாழ்த்துகள். “என்றார்

மலையாள இயக்குநர் லால்ஜோஸ் பேசும்போது, “முதலில் என்னை நடிக்க அழைத்தார்கள். நான் ஆள்மாத்தி என்னை அழைத்து விட்டார்கள் என்று நினைத்தேன். சென்னை தான் என்னை இயக்குநர் ஆக்கியது. இந்தப்படத்தில் சின்ன ரோல் தான் என்று நினைத்தேன். ஆனால் பெரிய ரோல். ஸ்பாட்டில் நடிகராக இருக்கும்போது பெரிய பதட்டம். படிச்ச டயலாக்ஸ் எல்லாம் மறந்து போனது. சூட்டிங் முடிந்த போது இனி நான் தப்பித்தேன் என்று நினைத்தேன். ஆனால் டப்பிங்கும் நான்தான் பேசணும் என்றார்கள். பேசி இருக்கிறேன். இந்த ஜிப்ஸி ஒரு அபூர்வ சினிமா. பெரிய இயக்குநர்களின் பெயரைப் பார்த்து தான் நாங்கள் படம் பார்ப்போம். அதேபோல் வருங்கால சந்ததியினர் ராஜு முருகன் பெயரைத் தேடுவார்கள்” என்றார்.

இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசும்போது, “முதல்முறையாக என் ஸ்டுடியோவில் குக்கூ படத்தின் இசைப்பதிவு தான் நடந்தது. ராஜுமுருகன் ஒரு மாமனிதன். இந்தப்படத்திற்கு ஜிப்ஸி என்ற பெயரை கேட்டதும் மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஏன்னா எல்லா கலைஞர்களும் ஒரு ஜிப்ஸியாக இருக்க ஆசைப்படுவார்கள். அந்த அனுபவத்தை மொத்தமாக கொடுத்த ராஜு முருகன் அவர்களுக்கு நன்றி” என்றார்

நடிகர் ஜீவா பேசும்போது, “ஜிப்ஸி எனக்கு ஒரு பெரிய பயணம். என் வீட்டிலே நான் ஜிப்ஸி போல தான். இந்தமாதிரி ஒரு படம் கிடைத்ததும் மிகப்பெரிய மகிழ்ச்சி அடைந்தேன். ஜிப்ஸி ரசிகனை முன்மொழிபவன். இன்னைக்கு நாம போன், நியூஸ் சேனல் எல்லாத்தையும் பார்க்காமல் இருந்தால் பிரச்சனைகள் இல்லாமல் இருப்பது போல இருக்கும். இந்தப்படத்திற்கு நான் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணித்து இருக்கிறேன். இந்தப்படத்தில் ராஜுமுருகன் சார் எனக்கு நல்ல தீனி கொடுத்து இருக்கிறார். ஒரு நடிகன் நல்ல பெயர் வாங்குறான்னா அதற்கு காரணம் இயக்குநரின் எழுத்து தான். ராஜு முருகன் எழுத்து உணர்வைச் சரியாக வெளிப்படுத்தும். ராம், கற்றது தமிழ் படங்கள் எப்படி எமோஷனை வெளிப்படுத்தியதோ ஜிப்ஸி அதைவிட அதிகமாக எமோஷனை வெளிப்படுத்தும். ராஜு முருகன் ஒரு கம்ப்யூனிஸ்ட். இந்தமாதிரியான இசை வெளியீட்டு விழாக்கள் தான் நிறைய நடக்க வேண்டும். பாந்த்சிங் போன்றவர்களை அறிமுகப்படுத்திய இந்தமேடை மிகச்சிறப்பான மேடை. இந்தப்படத்தில் உழைத்த அனைவருமே உண்மையாக உழைத்திருக்கிறார்கள். எனக்கு நல்ல ஒரு ஆல்பத்தை இந்தப்படம் மூலம் தந்த இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவர்களுக்கு நன்றி” என்றார்