“ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி” விருது தமிழ் மக்களுக்கு சமர்ப்பனம் – சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்


வருடந்தோறும் சர்வதேச திரைப்பட விழா இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பொன்விழா ஆண்டாக 50வது சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கி வரும் 28ம் தேதி வரை கோவாவில் நடைபெற உள்ளது.

இன்று தொடங்கிய விழாவிற்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையேற்றார்.

இந்திய சூப்பர்ஸ்டார்கள் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் ஆகியோர் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடக்கி வைத்தனர்.

சர்வதேச திரைப்பட விழாவுக்கு இந்த ஆண்டு பொன்விழா என்பதால் இந்திய சினிமாவுக்கு முக்கிய பங்களிப்பு செய்த திரைப்பட கலைஞர்களை கவுரவிக்க முடிவு செய்த மத்திய அரசு, நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் 50-வது ஆண்டு சர்வதேச திரைப்பட விழாவின் கவுரவ விருதான “ஐகான் ஆப் கோல்டன் ஜுப்ளி” எனும் விருது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோர் இணைந்து ரஜினிகாந்துக்கு விருது வழங்கினர்.

விருது வாங்கியபின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேசியதாவது: “ஐகான் ஆப் கோல்டன் ஜுப்ளி” விருது பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு விருது வழங்கி கவுரவித்த இந்திய அரசுக்கு நன்றி. தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், ரசிகர்கள் மற்றும் என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்” என கூறினார்.