கல்பனாவின் நிலைமை அனுஷ்காவிற்கு வாராமல் இருந்தால் சரி..!

கிட்டத்தட்ட 27 வருடங்களுக்கு முன் பாக்யராஜ் இயக்கிய படம் சின்னவீடு.. குண்டான மனைவியை திருமணம் செய்துகொண்ட ஒருவன, அழகான சின்னவீடு செட்டப் செய்து அல்லல்படுவது தான் கதை. இதில் பாக்யராஜின் மனைவியாக கதாநாயகியாக நடித்தவர் தான் ஊர்வசியின் அக்காவான கல்பனா.. தமிழில் கல்பனா அறிமுகமான முதல் படம் இதுதான்..

கதாநாயகியாக நடிக்காவிட்டாலும் கூட, இந்தப்படத்தில் ஒப்பந்தமாவதற்கு முன் கல்பனா மற்ற எல்லா நடிகைகளையும் போல ஸ்லிமாகத்தான் இருந்தார். ஆனால் அவரது கேரக்டருக்காக குண்டாக வேண்டும் என பாகயராஜ சொல்லவே, நன்றாக சாப்பிட்டு குண்டானார். படம் வெளியாகி சூப்பர்ஹிட்டானது. ஆனால் கல்பனாவால் தனது உடல் எடையை குறைக்க முடியவில்லை.. அவரால் பழைய உருவத்தை பெறவே முடியவில்லை.

அதன் பின் பல வருடங்கள் அவர் குண்டாகவே இருந்தார்.. அதனாலேயே ஆறேழு வருடங்கள் கழித்து அதே சின்னவீடு கான்செப்ட்டுடன் உருவான கமல் நடித்த ‘சதிலீலாவதி’ படத்திலும் அவரையே ரமேஷ் அரவிந்தின் குண்டு மனைவியாக நடிக்க வைத்த கொடுமையும் நடந்தது.

இதை இப்போது இங்கே குறிப்பிட காரணம் இருக்கிறது. தற்போது இதேபோன்ற ஒரு ரிஸ்க்கைத்தான் அனுஷ்கா எடுத்துள்ளார்.. அதாவது தான் நடித்துவரும் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் குண்டாக நடிக்க வேண்டும் என்பதற்காக உடல் எடையை கூட்டியுள்ளார் அனுஷ்கா..

இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானபோது அனுஷ்காவின் தோற்றம் பார்த்து ஆச்சர்யப்பட்டாலும், கல்பனாவுக்கு நடந்த கதையை நினைத்து அனுஷ்காவுக்கும் உடல் எடையை குறைக்க முடியாமல் போய்விடுமோ என்கிற பயமும் எழவே செய்கிறது..

பொதுவாக நடிகர்களால் எடையை கூட்டி குறைக்க முடிவது போல நடிகைகளால் முடிவதில்லை என்பது தான் சினிமா வரலாறு. ஆனால் அனுஷ்கா எப்படியாவது இதிலிருந்து தப்பித்தால் சரி..