83 படத்தை தமிழில் வெளியிடுவது பெருமை – கமல்ஹாசன்


கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி 1983-ல் கிரிக்கெட் உலக கோப்பையை வென்று சாதனை நிகழ்த்தியது. இந்த வரலாற்று நிகழ்வை மையமாக வைத்து ‘83’ என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது.

ஏற்கனவே கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், டோனி ஆகியோர் வாழ்க்கை படமாக வெளிவந்து வரவேற்பை பெற்றன. அதுபோல் 83 படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

கபீர்கான் இயக்கும் இப்படத்தில் கபில்தேவாக ரன்வீர் சிங் நடிக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. உலக கோப்பையை வென்ற அணியில் இருந்த தமிழக வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா நடிக்கிறார். இதன்மூலம் ஜீவா பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.

இந்நிலையில், 83 படத்தை தமிழில் கமலின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து வெளியிட உள்ளது.

இதுகுறித்து கமல்ஹாசன் கூறியதாவது:

”83 படத்தை தமிழில் வழங்குவதில் மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறேன். வரலாற்றின் வெற்றி பக்கங்களை, அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்த கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் திரையில் உருவாக்கி அளிப்பதில் கர்வமும் பெருமையும் கொள்கிறேன்” என தெரிவித்தார்.