மகள்கள் பற்றி கமல் வெளியிட்ட பகீர் தகவல்..!

 

தனது மகளை கடத்த வேலை செய்தவர்கள் திட்டமிட்டதாகவும், அதனை முன்வைத்தே ‘மகாநதி’ கதையை எழுதியதாகவும் கமல் தெரிவித்துள்ளார். தனக்கு மிகவும் பிடித்த படமான ‘மகாநதி’ படத்தின் கதையை எழுதத்தூண்டிய சம்பவம் பற்றி குறிப்பிட்ட கமல், இந்த பகீர் தகவலையும் இப்போதுதான் வெளிப்படுத்தியுள்ளார்..

 

அதில், “எது என்னை ‘மகாநதி’ எழுதவைத்தது என்பது பற்றி நான் இதுவரை சொன்னதில்லை. இப்போது எனது மகள்கள் வளர்ந்துவிட்டனர். உலகம் எப்படி என புரிந்துகொண்டிருப்பார்கள். எனவே இப்போது சொல்கிறேன். எனது வீட்டில் வேலை செய்தவர்கள் எல்லோரும் சேர்ந்து எனது மகளை கடத்தி அதன் மூலம் என்னிடம் மிரட்டி பணம் பெறலாம் என திட்டம் போட்டிருந்தார்கள்.

 

ஒரு முறை அதற்கான ஒத்திகையும் நடந்தது. ஆனால் எதேச்சையாக அவர்கள் திட்டத்தை நான் கண்டுபிடித்துவிட்டேன். எனக்கு கோபம் வந்தது, பதட்டமானேன், எனது குழந்தையின் பாதுகாப்புக்காக கொலை செய்யவும் தயாரானேன். ஆனால் சரியான சமயத்தில் என் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டேன்.

 

அப்போது நான் புதிய திரைக்கதை ஒன்றை எழுதவேண்டியிருந்தது. அதை நான் ஒரு மாதமாக தள்ளிப் போட்டு வந்தேன். இந்த சம்பவத்துக்குப் பிறகு நான் எழுத உட்கார ஆரம்பித்தபோது, அது தானாக நடந்தது. ஒருவேளை என் பயமும், பீதியும், ஏதோ நடந்துவிடுமோ என்ற பிரமையும் அதற்கு உதவியிருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்