‘கத்தி’ படத்தை யாருக்கும் தரமாட்டோம், நாங்களே வெளியிடுவோம் – லைக்கா அதிபர் அறிவிப்பு

‘கத்தி’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும். ‘கத்தி’ படத்தை யாருக்கும் தரமாட்டோம் எங்கள் படத்தை நாங்களே வெளியிடுவோம் .. என்று அவர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜா சென்னையில் இன்று கூறினார் .

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா, நீல் நிதின் முகேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கத்தி’ படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். செப்.18-ஆம் தேதி ‘கத்தி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற இருக்கிறது.

லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜா இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு நெருக்கமானவர், இலங்கையில் தொழில் செய்து வருகிறார் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. லைக்கா நிறுவனத்திற்கு பல்வேறு தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன..

இந்த நிலையில் இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய அல்லிராஜா “எங்களுக்கு எந்த ஓர் அரசியல் பின்னணியும் கிடையாது. மக்களுக்கு உதவும் நோக்கில் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு இலங்கை அரசு அனுமதி அளிக்கிறது. எங்களை மட்டுமே அனுமதிக்கவில்லை. எங்களுக்கு எதிராக இருப்பது தொழில்முறை போட்டி. இப்படத்திற்கு எதிராக இருப்பவர்களிடம் பேசுவதற்கு தயாராக இருக்கிறேன்.

எனக்கு படம் தயாரித்துதான் வருமானம் ஈட்டவேண்டும் என்கிற நிலையில் நான் இல்லை என்னுடைய இரண்டு நாள் வருமானம்தான் ‘கத்தி’ படத்தின் தயாரிப்பு செலவு. என்னிடம் எந்த அமைப்புகள் வந்து பேசினாலும் பேசுவதற்கு தயாராக இருக்கிறேன் .. நானும் தமிழன்தான் எனக்கும் தமிழ்பற்று இருக்கிறது தமிழ் மக்களை மதிக்க கூடியவந்தான் நான் ..எனவே இந்த கத்தி படம் பற்றி எந்த கேள்விகளுக்கும் நான் பதில் சொல்ல கடமைபட்டு இருக்கிறேன் .. ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். எங்களுக்கு 3 பில்லியன் யூரோ அளவிற்கு வியாபாரம் இருக்கிறது. எங்களுக்கு ஏன் ராஜபக்ச பண உதவி செய்ய வேண்டும் என்று தெரியவில்லை.

‘கத்தி’ படத்தைத் தொடர்ந்து பல்வேறு தமிழ்ப் படங்களை தயாரிக்க இருக்கிறோம். விரைவில் இந்தி மற்றும் ஏன் ஹாலிவுட்டில்கூட படங்களை தயாரிக்கத் திட்டமிட்டு வருகிறோம். இப்படம் குறித்து விஜய் என்னிடம் எதுவும் கருத்து கூறவில்லை. படத்தில் வேண்டுமானால் கருத்து கூறியிருப்பார்.

இவ்வாறு லைக்கா அதிபர் அல்லிராஜா கூறினார் .