பேயின் பிடியில் இருந்து விடுபட முடியாமல் தவிக்கும் லாரன்ஸ்..!

வெள்ளிவிழா நாயகன் மோகனை தெரியும் தானே..? ஒரு காலத்தில் அதிக அளவில், வெள்ளிவிழா படங்களாக கொடுத்துவந்த மோகன் ‘உருவம்’ என்கிற பேய்ப்படத்தில் பேயாகவே நடித்தார்.. அன்றிலிருந்து மோகனின் உருவத்தை தமிழ்சினிமாவில் பார்க்கவே முடியவில்லை.. பேய் ராசி அவரை கவிழ்த்துவிட்டது என்றுகூட வேடிக்கையாக சொல்வார்கள்.

ஆனால் இப்போது ராகவா லாரன்ஸுக்கு பேய்தான் சோறுபோடுகிறது. எப்போது பேயாக நடிக்க ஆரம்பித்தாரோ அப்போது இருந்து அவரது காட்டில் வசூல் மழை தான்.. அதனாலேயோ என்னவோ காஞ்சனா, காஞ்சனா-2 படங்களை தொடர்ந்து ஏதாவது சமூகப்படங்களை இயக்குவார், நடிப்பார் என்று பார்த்தால் அவரோ மீண்டும் பேய்ப்படங்களையே இயக்கவுள்ளார்.

படத்தின் பெயரை கேட்டாலே சும்மா பேய்களே அதிரும்போல ஒரு படத்துக்கு நாகா, இன்னொன்றுக்கு மொட்ட சிவா கெட்ட சிவா என பெயர்களை வைத்துள்ளார்.. இதில் நாகா படத்தில் பாம்பாக மாறுகிறார் லாரன்ஸ்.. ஆக ஏதோ ஒரு ரூபத்தில் பேயாக மாறாமல் லாரான்சால் இருக்க முடியாது என்றே தோன்றுகிறது.