பண்ணினது எல்லாம் புருஷன்.. ஆனால் டைரக்சன் கார்டு பொண்டாட்டிக்கு…!

சினிமாவில் பிரபல நடிகர்களாக அல்லது இயக்குனர்களாக இருப்பவர்களின் மனைவிமார்களுக்கு தாங்கள் மட்டும் வீட்டில் ஏன் சும்மா இருக்க வேண்டும் என்கிற நினைப்பு ஓடிக்கொண்டே இருக்கும். ஒரு கட்டத்தில் தாங்கள் கற்ற மொத்த வித்தையையும் சினிமாவில் காட்டினால் என்ன என்கிற ஆவல் தலைதூக்கும்.

அவர்களது கணவன்மாரும் எப்படியோ போங்கள் என க்ரீன் சிக்னல் காட்டிவிட, மனைவிமார்கள் பலரும் படையெடுப்பது டைரக்சன் டிபார்ட்மென்ட்டை நோக்கித்தான். தனுஷின் மனைவியும் உதயநிதியின் மனைவியும் அந்தவிதமாக டைரக்சன் டிபார்ட்மென்ட்டுக்குள் நுழைந்தததை பார்த்து, ‘இரண்டாம் உலகம்’ இயக்குனரின் காதல் மனைவிக்கும் டைரக்சன் ஆசை ஏற்பட்டது..

அவரும் தனது கணவரிடம் திருமணத்திற்கு முன் உதவி இயக்குனராக இருந்தவர் தானே..? அப்படி, இப்படி என ஆட்களை பிடித்து ‘மாலை நேரத்து மயக்கம்’ என்கிற படத்தை ஆரம்பித்து முடித்துவிட்டாராம். ஆனால் படப்பிடிப்புக்கு கூடவே வந்து, “இதோ இப்படித்தான் டைரக்ட் பண்ணனும்” என சொல்லிக்கொடுப்பது போல இந்தப்படத்தின் முக்கிய காட்சிகள் அனைத்தையும் இயக்கியது அவரது கணவர் தானாம்..

படத்தில் பணிபுரிந்த உதவி இயக்குனர்கள் டீமும் கணவரின் டீம் தானாம்.. இதில் என்ன பியூட்டி என்றால், நம்ம இயக்குனர் அறிமுகமான காலகட்டத்தில், தனது முதல் படத்தை இயக்கிவிட்டு, எங்கே தப்பாக போய்விட்டால் தன் பெயர் முதல் படத்திலேயே டேமேஜ் ஆகிவிடுமோ என பயந்து, தனது தந்தையின் பெயரை டைரக்சன் கார்டில் போட்டுக்கொண்டார்.. படம் ஹிட்டானதும், அப்பாடா என பெருமூச்சு விட்டவர், தான் தான் அந்தப்படத்தை இயக்கியது என செய்தியை கசியவிட்டார்.

இப்போது தனது மனைவி பெயரில் இவரே படத்தை இயக்கியதற்கு காரணம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதற்குத்தான்.. ஏற்கனவே ஐஸ்வர்யா தனுஷ், கிருத்திகா உதயநிதி இருவரும் பிளாப் படங்களாக கொடுத்ததால், தன் மனைவி இயக்கும் முதல் படமும் பெயிலியர் ஆகிவிட்டது என்கிற அவப்பெயர் வரக்கூடாது என்பதற்காகவும், அதேசமயம் மனைவி பெயரில் தான் இயக்கிய படம் ஹிட்டானால், தனது திறமைக்கு இன்னும் வரவேற்பு இருக்கிறது என்பதை கண்டறிந்துகொள்ள உதவும் சோதனை முயற்சியாகவும் தான் இப்படி மாற்று வழியில் இறங்கியுள்ளார் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.