எஸ்.ஜே.சூர்யாவின் திரையுலக பயணத்தின் திருப்புமுனையாக அமைந்த ‘மான்ஸ்டர்’


பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடித்திருக்கும் ‘மான்ஸ்டர்’ கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. வித்தியாசமான கதைக்களத்தில் இயல்பான நடிப்பு மூலம் அசத்தியிருக்கும் எஸ்.ஜே.சூர்யா பாராட்டுக்கள் குவிகின்றன.

இயக்குநராக பல வெற்றிகளைப் பார்த்த எஸ்.ஜே.சூர்யா, ஹீரோவாக வெற்றி வெற்றி பெற்று மீண்டும் எழுசியுடன் தனது அடுத்தகட்ட ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். இந்த நிலையில், தனது வெற்றிக்கு காரணமான ரசிகர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நன்றி சொல்லும் விதமாக இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார் எஸ்.ஜே.சூர்யா.

“வாலி’யில் இயக்குநராக தொடங்கிய எனது பயணம் ஹீரோவாக தொடருவதற்கான ஆரம்ப புள்ளியாகவே ‘மான்ஸ்டர்’ படத்தின் வெற்றியை பார்க்கிறேன். என்னால் இயக்கி, நடித்து வெற்றி கொடுக்க முடியும் என்றாலும், பிற இயக்குநர்களின் படங்களில் நடித்து வெற்றிக் கொடுக்க வேண்டும் என்பது தான் என் எண்ணம். அதற்காக தான் இத்தனை ஆண்டுகளாக நான் காத்துக்கொண்டிருக்கிறேன். எனது காத்திருப்புக்கான நல்ல தொடங்கமாகவே இந்த வெற்றி அமைந்திருக்கிறது.

தியேட்டரில் மக்களோடு மக்களாக சேர்ந்து படம் பார்த்தேன், சிறுவர்கள் படங்களை கொண்டாடி பார்ப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு வித்தியாசமான கதையில், என்னால் நடிக்க முடியும் என்று நம்பிக்கை வைத்த இயக்குநர் நெல்சன், இப்படி ஒரு படத்தை தயாரித்த பொட்டென்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனத்தினரின் தைரியத்திற்கும் நான் நன்றி சொல்கிறேன்.

பாலைவனத்தில் ஒட்டகம் போல ,ஓடிக்கொண்டிருக்கும் என் திரைப் பயணத்தில் முதல்முறையாக குடும்பங்களை இணைத்துள்ளது, மான்ஸ்டர் ஒரு புதிய பயணத்தின் தொடக்கம் என் படத்திற்கு முதல்முறையாக இவ்வளவு குடும்பங்கள் வந்துள்ளது இவ்வளவு நாள் இதை தவறவிட்டு விட்டேன். இனி இந்தி தெலுங்கு என ஒரு கலக்கு கலக்கவேண்டும்.. அதற்கு பிள்ளையாரின் வாகனமாக எலியின் மூலமாக நல்ல தொடக்கம் கிடைத்துள்ளது

தற்போது அமிதாப் பச்சன் சாருடன் சேர்ந்து ‘மாமனிதன்’ படத்தில் நடித்து வருகிறேன். ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘இறவாக்காலம்’ ஆகிய படங்கள் விரைவில் ரிலீஸாக உள்ளது. இரண்டுமே நல்ல கதையம்சம் கொண்ட படங்கள், நிச்சயம் வெற்றி பெறும். இன்னும் மூன்று படங்களில் நடிப்பது குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

இப்போதைக்கு நடிப்பில் தான் எனது முழு கவனமும் இருக்கும். ஒருவேளை நல்ல கதைகள் எனக்கு அமையாமல் காலம் ஓடினால், இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுக்காக படம் இயக்குவார்.” என்றார்.

திருமணம் எப்போது? என்று கேட்டதற்கு, “தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வெற்றியடைந்த பிறகே திருமணத்தைப் பற்றி யோசிப்பேன்.

வாழ்க்கையில் நாம் அடையும் தோல்வி அனைத்தையும் கற்றுக் கொடுக்கும். ஒரு படம் தயாரித்தால் போதும் அனைத்தும் அடங்கிவிடும். அதே போல் தோல்வியும் நமக்கு பல விஷயங்களை கற்றுக்கொடுக்கும். அப்படிதான் நானும் பலவற்றை கற்றுக்கொண்டேன்.

சினிமாவில் ஒரு தவறுசெய்துவிட்டால் அடுத்த வாய்ப்பு வருவதற்கு 8 வருடங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரை வேறுவழியில்லாமல் கிடைத்த வேலையெல்லாம் செய்தாக வேண்டும். தயாரிப்பு பணியை எடுத்ததே நடிகனாக வேண்டும் என்ற ஆசையில் தான். அந்த ஆசை நிறைவேற நான் கடினமாக உழைத்துக் கொண்டு இருக்கிறேன். வேறு எதைப் பற்றியும் இப்போதைக்கு யோசிக்க மாட்டேன். எனது குறிக்கோள் நல்ல மார்க்கெட் உள்ள ஒரு நடிகராக வேண்டும், அதை நோக்கிய எனது பயணத்தில் இப்போது தான் 20 கிலோ மீட்டர் தூரத்தை கடந்திருக்கிறேன், இன்னும் 80 கிலோ மீட்டர் தூரம் இருக்கிறது.” என்றார்.