நோட்டாவால் சூர்யா படம் தாமதமாகிறதா..?


டைட்டிலை படித்துவிட்டு ஏற்கனவே ரிலீசான படத்தால் சூர்யா படத்துக்கு என்ன சிக்கல் என்கிற கேள்வி எழத்தான் செய்யும்.. ஆனால் விஷயம் இருக்கிறது.

அத்திப்பூத்தாற்போல படங்களை இயக்குபவர் இயக்குனர் செல்வராகவன்.. ஆனால் ஒவ்வொரு படத்திலும் ரசிகர்களிடம் ஏதாவது ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தி விடுவார். அந்த வகையில் ஒரு சிறிய இடைவெளிக்குப்பிறகு தற்போது சூர்யாவை வைத்து ‘என்ஜிகே’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். செல்வராகவன்.

“நான் மீண்டும் இணைந்து பணியாற்ற விரும்பும் நடிகர் என்றால் அது சூர்யா தான் என சில மாதங்களுக்கு முன் மிகவும் நெகிழ்ச்சியாக கூறியிருந்தார் செல்வராகவன். ஆனால் நடக்கும் நிகழ்வுகளை பார்த்தால் தம்பி, கார்த்தியை போல அண்ணன் சூர்யாவுக்கும் இந்த ஒரு படத்தோட போதுண்டா சாமி என்கிற அனுபவமே ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

காரணம் ‘என்ஜிகே’ படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி முடியாமல் நீண்டுகொண்டே போகிறதாம். ஏற்கனவே நூறு நாட்கள் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இன்னும் நாற்பது நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என புதுகுண்டை தூக்கிப்போடுகிறார்கள் படக்குழுவினர்.

அதற்கு காரணம் சமீபத்தில் வெளியான நோட்டா படம் தான். அந்தப்படத்தைப்போல ‘என்ஜிகே’ படமும் அரசியல் பின்னணியில் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. ‘என்ஜிகே’வுக்காக எடுக்கப்பட்ட பல காட்சிகள் நோட்டாவிலும் இடம் பிடித்திருந்தனவாம். அரசியல் படம் என்றால் இப்படிப்பட்ட சாயல்கள் அவர்களை அறியாமலே வருவது வாடிக்கை தான். யார் முந்திக்கொள்கிறார்கள் என்பதில் தான் விஷயமே இருக்கிறது.

அதனால் தான் ‘என்ஜிகே’ படத்தில் சில காட்சிகளை மாற்றி மீண்டும் நாற்பது நாட்கள் படப்பிடிப்பு நடத்தவேண்டும் என சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் தீபாவளிக்கு திட்டமிட்டிருந்த இந்தப்படம், பின்னர் பொங்கல் ரிலீஸ் என மாறியது. இருக்கும் நிலையை வைத்து பார்த்தால் அதுகூட சந்தேகாம் தான் என்கிறார்கள்.