கொஞ்சம் நிதானம் காட்டுங்கள் சந்தானம்..!


சந்தனமும் சிவகார்த்திகேயனும் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து பிரபலமானவர்கள். இரண்டுபேருமே ஹீரோவாக நடித்து வருகிறார்கள். சந்தானம் காமெடி நடிகராக அறிமுகமானாலும், அவருக்கு பின்னால் வந்த சிவகார்த்திகேயனை பார்த்து அவருக்கும் ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை வந்தது. ஹீரோவாகியும் விட்டார்.

ஆனால் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடித்து முடித்தபின் தான் அடுத்த படம் என்பதில் உறுதியாக இருக்கிறார். அதனால் நிதானமாக படங்களை தேர்ந்தெடுத்து தொடர் வெற்றிகளை கொடுத்து வருகிறார்.

இன்றைய தேதியில் அவரை தேடி படையெடுத்துவரும் தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸை வாங்கிப்போட்டுக்கொண்டு கோடிகளை குவிக்கலாம். ஆனால் நீண்டகாலத்திற்கு நிலைத்து நிற்க வேண்டுமே என்பதால் நிதானம் காட்டுகிறார் சிவகார்த்திகேயன்.

ஆனால் சந்தானம் ஹீரோவானபின் இதுவரை மூன்று படங்களை கொடுத்துள்ளார். அவை வெற்றியோ, தோல்வியோ அதைவிட்டு விடுங்கள். தற்போது சர்வர் சுந்தரம், ஓடி ஓடி உழைக்கணும், சக்கப்போடு போடு ராஜா, மன்னவன் வந்தானடி என ஒரே நேரத்தில் நான்கு படங்களில் நடித்து வருகிறார்.

இதில் இரண்டு படங்கள் முடிவடைந்தும் இன்னும் வெளியாகாமல் இருக்கின்றன. மற்ற இரண்டு படங்களை நினைத்த நேரத்தில் படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

நிலைமை இப்படி இருக்க ஐந்தாவதாக மற்றுமொரு புதிய படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்க உள்ளாராம். அதுவும் தன்னை வளர்த்துவிட்ட இயக்குனர்களில் ஒருவரான எம்.ராஜேஷ் இயக்க உள்ள படத்தில்தான் சந்தானம் நாயகனாக நடிக்கப் போகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதம் ஆரம்பிக்க உள்ளார்களாம். ஆக முடிந்த படத்தை ரிலீஸ் பண்ண நினைக்காமல், அடுத்தடுத்து படங்களை நடிப்பது சந்தானத்தின் திரையுலக பயணத்தில் தடைக்கற்களாகவே இருக்கும். பயணம் சீராக தொடரவேண்டுமானால் படங்களை ஒப்புக்கொள்வதில் சந்தானம் கொஞ்சம் நிதானம் காட்டவேண்டியது அவசியம் என்றே பலரும் சொல்கிறார்கள்..