பிப்-9ல் ‘சி-3’ ;சூர்யாவுக்கு மட்டும் ஏன் இத்தனை சோதனைகள்..?


பொதுவாக ஒரு படம் வெளியாக பிரச்சனையாக இருப்பது பைனான்ஸ், சென்சார் போர்டு, விநியோகஸ்தர்கள் அமைப்பு, எதிர்பாராத கடைசி நேர வழக்கு என ஏதாவது ஒன்று காரணமாக இருக்கும்.. ஆனால் சூர்யாவின் ‘சி-3’ படத்துக்கு மட்டும் இயற்கையை சீரான இடைவெளியில் ஒவ்வொரு தடையாக ஏற்படுத்தி அந்தப்படத்தின் ரிலீசை தள்ளித்தள்ளி போட வைப்பதுதான் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமாக இருக்கிறது.

சொல்லப்போனால் தீபாவளிக்கே ரிலீஸாக வேண்டிய அந்தப்படம் கார்த்தியின் ‘காஷ்மோரா’ படத்துக்காக விட்டுக்கொடுத்து ஒதுங்கியது. அடுத்ததாக டிச-16 என உறுதியளித்தார்கள்.. ஆனால் அதன்பின் செல்லாத நோட்டு விவகாரம், முதல்வர் ஜெயலலிதா மரணம், வார்தா புயல், பொங்கலுக்கு ‘பைரவா’ ரிலீஸ் என பல காரணங்களால் தள்ளிப்போய் ஒருவழியாக ஜன-26ஆம் தேதி நாள் குறித்தார்கள்..

ஆனால் யார் கண்பட்டதோ தெரியவில்லை.. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் தொடங்கி இடைவிடாமல் நீடித்ததும், இந்தமுறையும் படம் வெளியாகுமா என்கிற சிக்கல் எழுந்தது.. ஆனால் ரிலீஸ் தேதிக்கு முன்கூட்டியே போராட்டம் முடிவுக்கு வந்தாலும் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் இயற்கையாகவே இன்னொரு முட்டுக்கட்டை விழுந்துள்ளது..

சிங்கம், சிங்கம்-2 ஆகிய படங்கள் அதிரடி போலீஸ் படங்கள் என்பதற்காக ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டன.. இவற்றின் மூன்றாம் பாகமான ‘சி-3’க்கும் அதே எதிர்பார்ப்பு தான் இருந்தது.. ஆனால் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதிநாளன்று போலீசார் மாணவர் மீது நடத்திய தாக்குதல் மக்களிடம் ஒரு மாறாத இனத்தையும் வெறுப்பையும் உருவாக்கி வைத்திருக்கிறது..

இன்னும் அந்த கோபத்திலிருந்து இயல்பு நிலைக்கு திரும்ப சில நாட்களாவது ஆகும். தவிர இந்தப்படமே ஆந்திர-தமிழக எல்லையில் நடைபெற்ற ஒரு கலவரத்தை போலீஸார் எப்படி அடகினார்கள் என்பதை மையப்படுத்திதான் உருவாகியுள்ளதாம்.. அதனால் இந்த நேரத்தில் ‘சி-3’ படத்தை வெளியிட்டால் நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்காது என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை..

வசூல் குறைந்துவிடுமே என இத்தனை நாள் ரிலீஸை தள்ளிப்போட்டு வந்ததும் அர்த்தம் இல்லாமல் போய்விடும்.. அதனால் பொறுத்தது பொறுத்தோம் இன்னும் இரண்டு வாரங்கள் காத்திருப்போம் என தற்போது வரும் பிப்-9ஆம் தேதிக்கு ரிலீஸ் தேதியை மாற்றி வைத்துள்ளார்கள். இந்த தேதியிலாவது நல்லபடியாக ரிலீசாக எந்த தடையும் வராமல் இருக்கட்டும்.