வரிசையாக படங்களை வளைத்துப்போடும் சிவகார்த்திகேயன்


இரண்டு வருடங்களுக்கு முன்பு எல்லாம் கிடைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாணியில், தான் நடித்த ஒரு படத்தை முடித்து ரிலீஸ் செய்துவிட்டுத்தான் அடுத்த படத்தில் நடிக்கப்போவேன் என அடம்பிடித்துக் கொண்டிருந்தார் சிவகார்த்திகேயன். இதனால் அவரது படங்களுக்கான இடைவெளி ரொம்பவே அதிகமாக இருந்தது.

அதன்பிறகு சொந்தமாக நிறுவனம் ஆரம்பித்து படங்களை தயாரிக்க ஆரம்பித்தார். தனது நண்பர் ஆர்.டி.ராஜாவுக்காக படங்கள் எடுத்துக்கொடுத்த வகையில் அந்த நிறுவனத்திற்கு ஏற்பட்ட நஷ்டத்தை சரிக்கட்ட வேண்டிய பொறுப்பும் சிவகார்த்திகேயனுக்கு தற்போது சேர்ந்துள்ளது. இதனால் தனது கொள்கையை தளர்த்திக் கொண்டு தற்போது அடுத்தடுத்த படங்களில் மளமளவென ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தை முடித்துவிட்டார். தொடர்ந்து இன்று நேற்று நாளை ரவிக்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதை முடித்து விட்டு இயக்குனர் பி.எஸ்.மித்ரன் டைரக்சனில் நடிக்க இருக்கிறார். அதைத்தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் டைரக்ஷனில் ஒரு படமும் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதற்கிடையே தனது சொந்த நிறுவனத்திலேயே தான் நடிக்கும் படம் ஒன்றையும் தயாரித்து நடிக்க திட்டமிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். ரஜினி-கமல், விஜய்ப்-அஜித், சிம்பு-தனுஷ் என இருதுருவ போட்டி எப்போதுமே தொடர்ந்து வருவது போல, தற்போது விஜய்சேதுபதி-சிவகார்த்திகேயன் என ஒரு காம்பினேசன் உருவாகிவிட்டது.

விஜய்சேதுபதி மளமளவென படங்களில் நடித்து வருவதால் தானும் அதே போல அடிக்கடி படங்களை ரிலீஸ் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.