தனுஷுக்கு உரிமை கொண்டாடும் தம்பதி ; நமக்கு எழும் சந்தேகங்கள்..!


கடந்த இரண்டு வருடமாகவே தனக்கு இப்படி ஒரு தீராத தலிவலி வந்துசேரும் என தனுஷ் கனவிலும் நினைத்து பார்த்திருக்க மாட்டார். ஒரு பக்கம் அதிர்ஷ்டத்தால் சூப்பர்ஸ்டாரின் மருமகன் ஆகிவிட்டாலும் கூட, தன்னுடைய கடின உழைப்பால் தான் இன்று ஹாலிவுட் வரை சென்று இருக்கிறார் தனுஷ். இது மறுக்க முடியாத உண்மை.

ஆனால் இப்படி புகழின் உச்சியில் இருக்கும் போது மதுரை மேலூரை சேர்ந்த தம்பதியினர் தனுஷ் தங்களின் மகன் என்றும், 11ம் வகுப்பு படிக்கும் போது சென்னையில் படிக்க வேண்டும் என்று வீட்டை விட்டு ஓடிவந்துவிட்டார் என்று புகார் தெரிவித்துள்ளனர். அவர்தான் தங்கள் மகன் என ஒரு யாரோ ஒரு சிறுவனின் போட்டோவையும் வெளியிட்டனர்.. மரபணு சோதனைக்கும் தயாராகத்தான் இருக்கின்றனர்.

அதற்கப்புறம் அவர்கள் கூறியுள்ளதுதான் காமெடி. தனுஷ் தங்களை அப்பா, அம்மா என ஏற்றுகொண்டு கூடவே வைத்துக்கொள்ள தேவையில்லையாம்… அதற்கு பதிலாக தாங்கள் சாப்பாடுக்கே வழியின்றி தவிப்பதால் தனுஷிடம் இருந்து மாதம் 65,000 ரூபாய் ஜீவனாம்சம் பெற்றுத்தர வேண்டும் என்று மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதை விசாரித்த நீதிமன்றம் ஜனவரி 12ம் தேதி தனுஷ் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இந்த விஷயத்தை கவனிக்கும்போதே நமக்கு இயல்பான சந்தேகங்கள் எழுத்தான் செய்கின்றன.. ஆனல் தனுஷ் மீதோ, கஸ்தூரி ராஜா மீதோ அல்ல.. சம்பந்தப்பட்ட கிழட்டு தம்பதியினர் மீதுதான்… பார்க்க அப்பாவிகள் போல காட்சியளித்தாலும், அவர்கள் இறங்கியிருக்கும் காரியம் அடப்பாவி என சொல்ல வைப்பது போல இருக்கிறது..

சில வருடங்களுக்கு முன் ஒரு மாநில முதல்வர் மீது, தான் அவருடைய மகன் தான் என்றுகூறி ஒரு இளைஞன் வழக்கு தொடுத்தார்.. நீதிமன்றமும் டி.என்.ஏ சோதனைக்கெல்லாம் உத்தரவிட்டது.. ஆரம்பத்தில் மறுத்த அவர், பின்னலில் அந்த இளைஞரின் தந்தைதான் என்பது உறுதியானது.. ஆனால் அந்த இளைஞர் வழக்கு தொடர்ந்தது, தனது தந்தை யார் என ஊருக்கு நிரூபிக்கத்தானே தவிர, தந்தையின் சொத்தில் பங்கு கேட்டு அல்ல.. காரணம் அது மானப்பிரச்சனை..

ஆனால் தனுஷ் விஷயத்தில் நடப்பது அதுவல்ல.. தனுஷிடம் இருந்து பணம் அபகரிக்கும் நோக்கிலோ, அல்லது அவரது புகழை களங்கப்படுத்தும் நோக்கிலோ அவருக்கு வேண்டாதவர்கள் பின்னணியில் இருந்து இவர்கள் இருவரையும் இயக்குகிறார்கள் என்றே தெளிவாக தெரிகிறது.. அதனால் தான் தனுஷிடம் இருந்து மாதம் 65,000 ரூபாய் ஜீவனாம்சம் பெற்றுத்தர வேண்டும் என்று அவர்களால் கூசாமல் கேட்க முடிகிறது.

சரி .. அவர்கள் கூறும் நியாயங்களை அலசிப்பார்க்கலாம். தங்களது பையன் 11ஆம் வகுப்பு படிக்கும்போது அதாவது கடந்த 20௦2ஆம் ஆண்டு காணாமல் போனதாக புகார் தெரிவித்துள்ளார்கள். அப்படியானால் அவர்களது பையன் வயது அப்போது சுமார் 16-17க்குள் இருக்கும் இந்த 14 வருடங்களில் 30-31ஆக மாறியிருக்கும்.. ஆனால் தனுஷின் தற்போதைய வயதோ தற்போது 33.

இப்போது தனுஷ் எங்கள் பையன் என முதிர்ந்த தனுஷ் உருவத்தை பார்த்து கூறும் இந்த கிழ போல்ட்டுகளால், துள்ளுவதோ இளமை படம் வெளியான காலகட்டத்திலேயே தனுஷின் போஸ்டரை ஊரெங்கும் அச்சடித்து வீதிவீதியாக ஓடினார்களே, அப்போது எளிதாக கண்டுபிடித்திருக்கலாமே.. அது அவர்கள் மகன் கலையரசன் ஓடிப்போன காலகட்டத்தில் தானே அந்தப்படம் வெளியானது.. தனுஷ் தான் தங்கள் மகன் என்றால் அப்போதே அல்லவா அவர்கள் குரல் எழுப்பி, புகார் கொடுத்திருக்கவேண்டும்.. துள்ளுவதோ இளமை’ தனுஷை அடையாளம் காண முயாதவர்கள் இப்போதிருக்கும் தனுஷை தங்களது மகனாக அடையாளம் கண்டு வழக்கு தொடர்ந்திருப்பது மிகப்பெரிய கேலிக்கூத்து.

அடுத்ததாக தனுஷின் வயதையும் அவர் பள்ளிப்படிப்பு முடித்த சான்றிதழையும் ஏமாற்ற முடியாதல்லவா..? அதை சரிபார்த்தாலே போதுமே.. தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா 1991லேயே படங்களை இயக்க ஆரம்பித்துவிட்டார். பிரபலமாகவும் ஆரம்பித்துவிட்டார். ஆக அவருடன் நன்கு பழகியவர்களுக்கு அவருக்கு இரண்டு மகன்கள் இருந்தார்களா, அல்லது ஒரு மகன் மட்டுமே இருந்தாரா என்பது அப்போதைய காலகட்டத்திலேயே நன்கு தெரிந்திருக்கும்.

தனது குடும்பத்துடன் கஸ்தூரி ராஜா கலந்துகொண்ட விழாக்கள், திருமண நிகழ்ச்சிகளில் இடம்பெற்றுள்ள குடும்ப வீடியோ அல்லது போட்டோக்கள் ஆதாரங்கள் நிச்சயமாக இல்லாமல் இருக்காது.. அதை சமர்ப்பித்தால் போதுமே.. பின் ஏன் இந்த வழக்கை கஸ்தூரி ராஜாவும் தனுஷும் சேர்ந்து சிக்கலாக்கி கொள்கிறார்கள் என்றும் தெரியவில்லை.