‘புதிய கிளிகளுக்கு செக் வைத்த பழைய மயில்’ – என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!

சிம்புதேவன் இயக்கிவரும் ‘புலி’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடித்து வருகின்றனர். இதில் பலவருடங்களுக்கு பிறகு இங்கிருந்து பாலிவுட்டுக்கு பறந்துபோன பழைய மயில் ஸ்ரீதேவி மீண்டும் என்ட்ரி கொடுத்திருக்கிறார். இதில் அரசியாக ஸ்ரீதேவி நடிக்க அவரது அழகு மகளாக இளவரசியாக ஹன்சிகா நடிக்கிறார்.

அனைத்து வித்தைகளும் அறிந்த மாவீரன் விஜய்யை காதலிக்கும் ஹன்சிகாவுக்கு அப்படியே வெறுமனே ஒருதலைக்காதலோடு நின்றுவிடுகின்ற கேரக்டர்தானாம். தவிர சுருதிஹாசன், ஹன்சிகா என புதிய கிளிகள் நடித்தாலும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவது என்னவோ தொகையே இல்லாத இந்த கிழட்டு மயிலுக்குத்தானாம்.

இதையெல்லாம் விட கொஞ்ச நாளைக்கு முன்பு இந்த மயிலுக்கு நான் ஈ சுதீப் முத்தம் கொடுக்கும் காட்சி இருப்பதாக ஒரு செய்தி வெளியானதே.. இதுவரை வெளியான கிசுகிசுக்களிலேயே குமட்டலான கிசுகிசு இதுவாகத்தான் இருக்கும். ஸ்ரீதேவி படத்தில் நடிப்பது படத்தின் புரமொஷனுக்கு வேண்டுமானால் பிளஸ் ஆக இருக்கலாம். ஆனால் படத்திற்கு அது நிச்சயம் மைனஸ் தான் என்கிறார்கள் சில வினியோக வல்லுனர்கள்.

அதற்கு உதாரணமாக ‘மாப்பிள்ளை’ படத்தில் மனிஷா கொய்ராலா ரீ-என்ட்ரியானபோது, அவராலேயே அந்தப்படம் ஊத்தி மூடியதையும் குறிப்பிடுகிறார்கள். நதியா போன்ற ஒரு சிலர் தான் இன்றும் ஆடியன்ஸை கட்டிப்போடும் அந்த பழைய அழகுடன் இருப்பதாகவும், ஸ்ரீதேவி அந்தக்கட்டத்தை எல்லாம் தாண்டி போய்விட்டதாகவும் அவர்கள் கவலையுடன் குறிப்பிடுகிறார்கள். அந்தவகையில் படத்தில் குறைந்த அளவு காட்சிகள் மட்டுமே இந்த மயில் வருவாரானால் படம் ஒரளவு தப்பிக்கும் என்கிறார்கள்.