சன் பிக்சர்ஸ் மீது தருணம் பார்த்து வெறுப்பை வெளிப்படுத்திய லைகா


நேற்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தபடி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் படத்திற்கு ‘பேட்ட’ என டைட்டில் வைத்து மாஸ் காட்டியிருக்கிறார்கள்..இதை ரசிகர்கள் கொண்டாடிக்கொண்டு இருந்த சற்று நேரத்தில் ரஜினியின் இன்னொரு படமான 2.O’வை தயாரித்து வரும் லைகா நிறுவனம் அந்தப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டது.

‘பேட்ட’ படத்திற்கான சந்தோஷ கூச்சல் அடங்குவதற்குள் ரஜினியின் இன்னொரு படம் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியானதால் ரசிகர்களின் கவனம் உடனே அந்தப்பக்கம் திரும்பியது.. இரண்டுமே ரஜினி படம் என்பதால் இந்த இரண்டு அறிவிப்புகளும் அவர்களுக்கு கொண்டாட்டம் தானே..? ஆனால் லைகா நிறுவனம் ஏன் இதே நாளில் தன்னுடைய படத்தின் டீசர் வெளியீடு குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும்..? ஓரிரு நாட்கள் கழித்து கூட வெளியிடலாமே என்கிற எண்ணம் பலருக்கு தோன்றலாம்.

இதன் பின்னணியில் சன் பிக்சர்ஸ் மீதான லைகாவின் கோபமும் வெறுப்பும் ஒளிந்துள்ளது என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்..ஆம்.. ரஜினியின் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாகத்தான் இந்த 2.O’ உருவாகி வருகிறது. எல்லோரும் தங்கள் ஹிட் படங்களின் பெயரிலேயே இரண்டாம், மூன்றாம் பாகம் வரை எடுத்துக்கொண்டிருக்க, ரஜினி படத்திற்கு எந்திரன்-2 என டைட்டில் வைக்கமுடியாமல் போனதற்கு காரணம் இந்த சன் பிக்சர்ஸ் தானாம்.

ஆம் லைகா பட நிறுவனம் சன் பிக்சர்ஸிடம் ‘எந்திரன்-2′ டைட்டிலை பயன்படுத்திக்கொள்ள அனுமதி கேட்டு தலைகீழாக நின்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் மறுத்துவிட்டது..

வேறு வழியில்லாமல் தான் 2.O என டைட்டில் வைத்தார் ஷங்கர்.. அந்த கோபம் லைகாவிடம் இப்போதும் இருக்கிறது. அதனால் தான் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தின் டைட்டில் வெளியானபோது, அது ரஜினி படமே என்றாலும், போட்டிக்கு தங்களது ரஜினி படத்தின் டீசர் குறித்த ஒரு அறிவிப்பை வெளியிட்டு ரஜினி ரசிகர்களின் கவனத்தை 2.O’ பக்கம் திருப்ப முயற்சி செய்தது.. ஓரளவு வெற்றியும் பெற்றது. ஆனாலும் இதில் ரஜினிக்கோ அல்லது அவரது ரசிகர்களுக்கோ எந்த நட்டமும் இல்லை என்பதுதான் ஹைலைட்.