சூப்பர்ஸ்டாரை மெய்சிலிர்க்க வைத்த மாற்றுத்திறனாளி ஓவியர் பிரணவ்


பிறவியிலேயே கைகளை இழந்தவர் ஓவியர் பிரணவ். கேரள மாநிலம், ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர். கைகள் இல்லாவிட்டாலும் தன்னம்பிக்கையுடன் ஓவியம் வரைவதைக் கற்றுக் கொண்ட பிரணவ் அதில் சிறந்து விளங்குகிறார். பட்டப்படிப்பையும் முடித்துள்ளார்.

சமீபத்தில் கேரளாவில் வெள்ளத்தினால் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து தனது பங்காக ஒரு தொகையை அளித்தார் ஓவியர் பிரணவ். அப்போது, பினராயி விஜயனுடன், பிரணவ் எடுத்த செல்பி நாடு முழுவதும் வைரலானது.

தற்போது சூப்பர்ஸ்டாரை அவருடைய போயஸ் கார்டன் இல்லத்தில் மாலை 5.30 மணியளவில் தனது பெற்றோர் மற்றும் சகோதரருடன் நேரில் சந்தித்திருக்கிறார் பிரணவ்.

அவருடைய எதிர்கால இலட்சியம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ரஜினி கேட்டறிந்திந்திருக்கிறார். எல்லாமே நல்லபடியா நடக்கும் என்று சூப்பர்ஸ்டார் ஓவியர் பிரணவை வாழ்த்தியுள்ளார்.

சுமார் 20 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பின் போது சூப்பர்ஸ்டாருக்காக தான் வரைந்து வைத்திருந்த ஓவியத்தை பிரணவ் வழங்கினார். அதன் பின் சூப்பர்ஸ்டாருடன் ஓவியர் பிரணவ் எடுத்த செல்பி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.