சூப்பர்ஸ்டாரின் அடுத்த படத்தை இயக்குகிறாரா சிவா?


பேட்ட திரைப்படத்தை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் திரைப்படத்தில் நடித்து வந்தார். தற்போது தர்பார் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இறுதிகட்டப் பணிகளை முடிக்க படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகிபாபு, சுனில் ஷெட்டி மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ள தர்பார் திரைப்படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸே மேலும் ஒரு கதையை சூப்பர்ஸ்டாருக்கு கூறியுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இயக்குநர் சிவாவின் இயக்கத்தில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், சிவாவோ சூர்யா படத்தை இயக்க ஒப்பந்தமானார்.

இதனால் மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலேயே சூப்பர்ஸ்டார் நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியான நிலையில், இயக்குநர் சிவாவுக்கு சூப்பர்ஸ்டார் ஓ.கே. சொல்லியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிவா கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே, நேற்று முன்தினம் இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் சூப்பர்ஸ்டார் ரஜினி. இதனால் இந்த கூட்டணி இணைவது உறுதியாகியுள்ளது. தன் பிறந்த நாளுக்கு முன்பாக படப்பிடிப்புக்குச் செல்லலாம் என்று ரஜினி கூறியுள்ளார். அதற்கு ஏற்றார் போல் பணிகளை வேகப்படுத்தியுள்ளது படக்குழு. இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.