டம்மி பாடலுக்கே கெட்ட வார்த்தை ; சிம்புவை மீண்டும் கோர்த்துவிட்ட டி.ஆர்..!


இப்போது பிரபலங்கள் பலரும் ஆளாளுக்கு தங்கள் முகநூல் பக்கத்தில் ஏதாவது சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டுவிட்டு பின்னர் அதை நான் வெளியிடவில்லை, என்னுடைய அட்மின் தான் வெளியிட்டு விட்டார் என நொண்டிச்சாக்கு சொல்லி சமாளிப்பது வாடிக்கையாகி விட்டது.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் தெரிவித்தார். பின் கொஞ்ச நேரத்தில் அதை நீக்கினார்.. நான் அதை பதியவில்லை, எனது அட்மின் தான் அப்படி செய்துவிட்டார் என பிளேட்டை திருப்பினார்.

அதேபோல சில நாட்களுக்கு முன் பெரியார் சிலையை உடைப்போம் என பதிவிட்டிருந்தார் ஹெச்.ராஜா.. ஆனால் எதிர்ப்புகள் வலுக்கவே, உடனே தடாலடியாக நான் அதை பதியவில்லை, எனது அட்மின் தான் அப்படி செய்துவிட்டார் என கூறி குபீரென குப்புற படுத்துக்கொண்டார்.

அதேபாணியில் தான் இப்போது சிம்புவின் தந்தை டி.ஆரும் தனது மகனுக்கு ஆதரவாக ஒரு ஸ்டேட்மென்ட் கொடுக்கிறேன் என கூறி சிம்புவை மேலும் நாறடித்துள்ளார்

அனிருத் இசையில் சிம்பு பாடி உலகப்புகழ்பெற்ற ‘பீப் சாங்’ பற்றி திரும்பவும் அறிமுகம் தேவையில்லை.. சென்னை மழைவெள்ளத்தில் மிதந்த அந்த கொடூர தினத்தில் ‘என்ன …க்கு லவ் பன்னணனும்” என சிம்புவும் அனிருத்தும் இணைந்து இந்தப்பாடலில் தங்களது வக்கிர முகத்தை காட்டி மக்களை அதிரவைத்தார்கள்.. அதன்பின்னர் சிம்பு தலைமறைவானது, போலீஸ் தேடியது எல்லாம் தனிக்கதை.

இன்று டி.ஆர் நிகழ்த்திய பத்திரிக்கை சந்திப்பில் இந்த பீப் பாடல் விவகாரம் குறித்து கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த டி.ராஜேந்தர், “அந்த பீப் பாடல் விவகாரம் என்பது சிம்பு மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட, அவப்பெயரை ஏற்படுத்த வேண்டுமென நடத்தப்பட்ட ஒரு போர். பொதுவாக இசையமைப்பாளர்கள் டம்மி வார்த்தைகளைப் போட்டுத்தான் பாடல்களை உருவாக்குவார்கள். அப்படி உருவாக்கி வைத்திருந்த ஒரு பாடலை யாரோ ஒருவர் எடுத்துச் சென்று வெளியிட்டுவிட்டார். அந்தப் பாட்டை திருடி எடுத்துக் கொண்டு போய், திருட்டுத்தனமாகச் செய்து அவரை மாட்டிவிட்டுவிட்டார்கள்” என கூறினார்.

அந்தவகையில் பாடலை திருட்டுத்தனமாக வெளியிட்டதாக அட்மின் மீது குற்றம் சுமத்திய டி.ஆர், தனது மகன் சிம்பு கெட்டவார்த்தைகளை வைத்து தான் பாடல் எழுதினர் என மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தி விட்டார்.