எல்லோருக்கும் தலை சுத்த வைப்பார் ரஜினி – தமிழருவி மணியன்


மீடியாவும் அரசியல் உலகமும் ஏன் பொதுமக்களும் கூட, ரஜினி அரசியலுக்கு வருவாரா என சந்தேகத்தோடு பார்த்த போது, அதை உடைத்து ரஜினி வருகிறார், தனிக்கட்சி தொடங்குகிறார். அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம் என உறுதியாகத் தெரிவித்தவர் தமிழருவி மணியன்.. ரஜினிகாந்தின் அரசியல் முடிவுகள் அனைத்திலும் தமிழருவி மணியனின் ஆலோசனையும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இருவரும் ஏற்கெனவே பலமுறை சந்தித்துப் பேசியுள்ளனர்.

அந்தவகையில் தந்தி டிவி நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கலந்துகொண்ட தமிழருவி மணியன் ரஜினியின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள், அவர் என்ன மாதிரி அரசியலை கையிலெடுக்க விரும்புகிறார் என்பதை தெளிவாக விளக்கினார். மேலும், தனக்கும் ரஜினிக்குமான தற்போதைய பந்தம், விவாகரத்தே இல்லாத கணவன்-மனைவி பந்தம் போன்றது எனவும் குறிப்பிட்டார். ரஜினியின் மீதும் அவர் கொள்கைகள் மீதும் தமிழருவி மணியன் கொண்டுள்ள நம்பிக்கையை இதைவிட அழகான, உறுதியான வாரத்தைகளில் வெளிப்படுத்தி விடமுடியாது.

அதுமட்டுமல்ல, சில நாட்களுக்கு முன்பு ஒரு கத்துக்குட்டி நிருபர் ரஜினியிடம் உங்கள் கொள்கை என்ன என்று கேட்டது ஞாபகம் இருக்கலாம். ரஜினி கட்சியை துவங்குகிறார் என சொல்வதற்கு முன்பே, அவரிடம் கொள்கை பற்றி கேட்டதில் இருந்தே அந்த கேள்வியில் உள்ள முட்டாள்தனத்தை நன்றாக தெரிந்துகொள்ளலாம். அதைத்தான் ரஜினி குறிப்பிட்டு’ ஒரு நிமிஷம் அப்படியே எனக்கு தலை சுத்திருச்சு’ என சொன்னார்.