வடிவேலு நடிக்கவேண்டிய கேரக்டரில் நடித்த விஜய்..!


விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்த படம் ‘துள்ளாத மனமும் துள்ளும்’. விஜய், சிம்ரன் நடித்த இந்தப் படம்தான் இயக்குனர் எழில் இயக்கிய முதல் படம். தமிழ் சினிமாவின் தலைசிறந்த காதல் படங்களில் ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்துக்கும் ஒரு தனி இடமுண்டு.

கேரளாவில் நடிகர் விஜய்க்குத் தனி மார்க்கெட் ஏற்பட அடித்தளமிட்டுக் கொடுத்த திரைப்படம் ‘துள்ளாத மனமும் துள்ளும்’ தான். இந்தப் படத்துக்குப் பிறகு கேரளாவில் விஜய்க்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது அப்படிப்பட்ட இந்தப்படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தவர் வடிவேலு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..?

இந்தபடம் வெளியாகி 19 ஆண்டுகள் ஆன நிலையில் இந்த உண்மையை உடைத்துள்ளார் இயக்குனர் எழில். இதுபற்றி அவர் கூறும்போது, “வடிவேலு சினிமாவுக்கு வந்த காலத்திலிருந்தே எனக்கு அவரை நல்லாத் தெரியும். அந்த பீரியட்லதான் வடிவேலு கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்துக்கிட்டு வந்தாரு. ஒருநாள் சும்மா ஃப்ரெண்ட்லியா பேசிட்டு இருக்கும்போது, இந்தக் கதையை வடிவேலுகிட்ட சொன்னேன்.

அவருக்கு இந்தக் கதை ரொம்பப் பிடிச்சுப்போச்சு. அப்புறம் வடிவேலுவும் நானும் நிறைய தயாரிப்பாளர்களைப் பார்த்தோம். வடிவேலு ஹீரோன்னு சொன்னதுமே துரத்தி விட்டுடுவாங்க. அதற்கப்புறம் முரளி சாருக்கு ஏத்த மாதிரி மாத்தினேன். அவருக்கும் கதை பிடிச்சிருந்தது. ஆனால், வடிவேலு மாதிரி அவருக்கும் தயாரிப்பாளர் கிடைக்காமல் போயிட்டாங்க. அதன்பின்னர் தான் ஆர்.பி.சௌத்ரி சாரும் அவர் மூலமாக விஜய் சாரும் இதில் உள்ளே வந்தாங்க” என்கிறார் எழில்.