நண்பர்கள் ஸ்ரீகாந்தும் ஷாமும் இப்போது எதிரிகளாகி விட்டார்கள்! – பரத் பேச்சு

நண்பர்களான ஸ்ரீகாந்தும் ஷாமும் இப்போது எதிரிகளாகி விட்டார்கள் என்று ‘நட்சத்திர பேட்மிண்டன் லீக்’ அறிமுக விழாவில் பரத் பேசினார்.இது பற்றிய விவரம் வருமாறு:

நட்சத்திர கிரிக்கெட்டைப் போலவே அடுத்து பிரபலமாக இருக்கிறது நட்சத்திர பேட்மிண்டன். க்ரீன் க்ரூப் ஆப் கம்பெனியின் ஏற்பாட்டில் SBL எனப்படும் ‘ஸ்டார் பேட்மிண்டன் லீக்'( Star’s Badminton League) சென்னையில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

இதன் அறிமுகவிழா சென்னை போரம் விஜயா மாலில் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

விழாவில் பிரபல பின்னணிப் பாடகர்கள் பாடல்களைப் பாடினார்கள். நடன இயக்குநர் அமைப்பில் நடனக் கலைஞர்கள் நடனம் ஆடினர்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் ஸ்டார் பேட்மிண்டன் லீக்கில் கலந்து கொள்ளப் போகும் அணிகள் அறிமுகப் படுத்தப் பட்டன.

‘சென்னை ஃப்ளிக்கர்ஸ்’ (Chennai Flickers ) அணியின் தலைவரும், உரிமையாளருமான ஸ்ரீகாந்த், ‘என் ப்ரண்டப் போல யாரு மச்சான் ‘பாடலைப் பாடி ஆரம்பித்தார்.

தொடர்ந்து ஸ்ரீகாந்த் பேசும் போது ”இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் கணேஷ் தான் ஒரு செயல்வீரர் என்று நிரூபித்து இருக்கிறார். இன்று மதத்துக்குப் பிறகு எல்லாராலும் பேசப் படுவது விளையாட்டுதான் .எல்லாரையும் இணைப்பதும் விளையாட்டுதான். கிரிக்கெட் வளர்ந்து விட்ட இந்தச் சூழலில் பேட்மிண்டனுக்கு முக்கியத்துவம் தரும் இம் முயற்சி வரவேற்புக்குரியது.

இது ஒரு ஆரம்பம்தான். பெரிய கட்டடத்துக்கான முதல் செங்கல் இன்று எடுத்துவைக்கப் பட்டிருக்கிறது. இது பெரிதாக வரும்; வளரும். மற்ற அணியின் தலைவர்கள் பரத், ஷாம் எல்லாரும் என் நண்பர்கள்தான். ஆனாலும் இது சரியான போட்டியாக இருக்கும்.நட்சத்திரங்களை வைத்து ஸ்டார் நைட் போன்ற விழாக்கள் வைப்பதை விட்டுவிட்டு இப்படி விளையாட்டு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சி செய்வதை நிச்சயம் பாராட்ட வேண்டும்.”என்றார்.

அடுத்த அணியான ‘சென்னை ஸ்மாஷர்ஸ்'(Chennai Smashers) உரிமையாளரான நடிகர் பரத் பேசும் போது:

“கிரிக்கெட் எனக்குப் புதுசில்லை. ஐந்து ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடி வருகிறேன். இதில் எனக்கு அணித்தலைவர் பொறுப்பு தந்ததற்கு நன்றி. என்னுடன் மோதும் ஷாம், ஸ்ரீகாந்த் இருவருமே எனக்கு சகோதரர் போன்றவர்கள். நண்பர்கள் போன்றவர்கள். இப்போது எதிரிகளாகி விட்டார்கள். ஆனால் எங்களுக்குள் போட்டி இருக்கும்;வேறுவழியில்லை ஆரோக்கியமான போட்டி இருக்கும். . ” என்றார்.

முன்றாவது அணியான ‘சென்னை ராக்கெட்ஸ்’ (Chennai Racquets) அணியைச் சேர்ந்த ஷாம் பேசும் போது:


முதலில் இப்படிப்பட்ட முயற்சியில் இறங்கியுள்ள கணேஷுக்கு நன்றி. பாராட்டுகள். இவர் இதற்கு முன் ஸ்டார் கிரிக்கெட் நடத்தினார். சின்னத்திரை நட்சத்திரங்களையும் வெள்ளித்திரை நட்சத்திரங்களையும் கிரிக்கெட்டில் மோதவிட்டார். பாண்டிச்சேரியில் நடத்திய அந்தப் போட்டியில் நான் கலந்து கொண்டேன். பிரமாண்டமாக நடத்தினார். பிரமாதமாக வெற்றியும் பெற்றார். ஒரு சாரிட்டிக்காக அதில் வசூலானதை எங்கள் முன்பாக அதே மேடையிலேயே கொடுத்தார். அப்படிப்பட்ட நல்ல இதயம் உள்ளவர் அழைத்ததால் மூன்று பேருமே மறுக்காமல் ஒப்புக் கொண்டோம். ஏதோ நடித்தோம் போனோம் என்ற இல்லாமல் நாமும் நல்ல விஷயங்களில் ஈடுபட வேண்டும் நல்ல விஷயங்களில் இடம் பெற வேண்டும் என்று நான் உடனே ஒப்புக் கொண்டேன். இதில் ஆடும் எங்களுக்குள் ஈகோ, பொறாமை எல்லாம் கிடையாது மகிழ்ச்சியுடன் கலந்து கொள்கிறோம். இதில் விளையாடும் போது வயது குறைந்த உணர்வு, எங்களுக்குள் இருக்கிற சிறு பையனை வெளிக் கொண்டு வரும் உணர்வு வருகிறது. ” என்றார்.

தங்கள் அணிகளின் பெயர்கள் பற்றிக் கூறும் போது ”பேட்மிண்டனில் படார் என்று அடிப்பது ‘பிளிக்’ . ஜெயிக்கபோவது பிளிக்கர்ஸ்தான் “என்றார் ஸ்ரீகாந்த் .

”என்னதான் ராக் கெட் வைத்து ப்ளிக் அடித்தாலும் கடைசியில் ஸ்மாஷ் அடித்தால் தான் சூப்பர் “என்றார் பரத்.

” ராக்கெட் இல்லாமல் ப்ளிக்கோ, ஸ்மாஷோ அடிக்க முடியாது. ராக்கெட் இல்லாமல் பேட்மிண்டனே இல்லை” என்றார் ஷாம்.

நிகழ்ச்சியில் சுற்றிலும் குழுமியிருந்த பார்வையாளர்கள் மத்தியில் ஒவ்வொரு அணியின் டிஷர்ட்டும் வண்ணமய ஒளியுடன் ஒலியும் அதிர அறிமுகம் செய்யப் பட்டது. அணியின் டி ஷர்ட்டை அமைப்பாளர் கணேஷ் அறிமுகம் செய்தார்.

இந்நிகழ்ச்சியின் முன்னோடிகளாக விளங்கும் நடிகை அனுராதா, அவரது மகள் அபிநயஸ்ரீ மட்டுமல்ல நடிகர்கள் பானுசந்தர் ,பவர்ஸ்டார்,அசோக்,ப்ருத்வி ,கிரண்,முன்னா, அருண், சரண், தருண், பிளேடு சங்கர், ஆரி, சூரி, பாபா பாஸ்கர் மாஸ்டர், நடிகைகள் நிரோஷா,ஜெனிபர், மணிஷா, ஸ்வாதி, அலீஷா அப்துல்லா, சஞ்சனா, ஐஸ்வர்யா ராஜேஷ், காயத்ரி, யாஷ்மித், சாரா ,பாடகர்கள் நவின், க்ரிஷ் ஐயர் ,இசையமைப்பாளர்கள் நிவாஸ் பிரசன்னா, தரண்குமார் ஆகியோரும் மேடையில் தோன்றி அணிகளை ஊக்கமூட்டினர்:
நிறைவாக ரோஜா கணேஷ் நன்றி கூறினார்.

இந்த ஸ்டார் பேட்மிண்டன் லீக் 2015 ஜனவரியில் சென்னை போரம் விஜயா மாலில் நடைபெறவுள்ளது.