வந்தாலும் பிரச்சனை.. வராவிட்டாலும் பிரச்சனை ; விஷாலை நோகவைக்கும் ஆர்யா..!

ஆர்யா சினிமா சம்பந்தப்பட்ட எந்த விழாவுக்கு வந்தாலும் கொஞ்சம் கலகலப்பாகத்தான் பேசுவார்.. விஷால் தனது நெருங்கிய நண்பன் என்பதால் அவரது விழாக்களில் பேசும்போது கொஞ்சம் அதிகமாகவே உரிமை எடுத்து கலாட்டாவெல்லாம் பண்ணுவார்.

இப்படித்தான் ‘ஆம்பள’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது என்ன மச்சான் உன் படம் ரிலீஸ் ஆகிற அதே தேதியில சில பெரிய படங்கள் வெளியாகுதே, என கேட்டதாகவும் அதற்கு எவனா இருந்தாலும் வெட்டுவேன் என விஷால் கூறியதாகவும், ஆர்யா ஜாலியாக பேசியது அந்த நேரத்தில் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

அதைத்தொடர்ந்து சில நாட்களுக்கு முன்ன்னரும் கூட ஆர்யா, விஷாலின் ‘பாயும் புலி’ ஆடியோ ரிலீஸ் ஆகும் முன்னரே ட்விட்டரில் ”எங்கள் அண்ணன் புரட்சித் தளபதியின் இசை வெளியீடு விரைவில்” என ட்வீட் செய்து ஸ்மைலி குறியீட்டை வெளியீட்டு விஷாலுக்கு கிலி ஏற்படுத்தினார்.

அதனால் விஷால் கும்பிடு போடாத குறையாக, ஆர்யா தயதுசெய்து நீ என்னுடைய பாயும் புலி ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு வந்துவிடாதே என கெஞ்சி கேட்டுக்கொண்டார். அதற்கேற்றமாதிரி ஆர்யாவும் ‘பாயும் புலி’ இசை வெளியீட்டு விழாவுக்கு வரவில்லை.. ஆனாலும் அப்பாடா என்று விஷாலால் கொஞ்ச நேரத்துக்குத்தான் நிம்மதி பெருமூச்சு விடமுடிந்தது.

காரணம் ‘பாயும் புலி’ படத்தின் பாடல் வெளியீடு நடந்த அன்று ஆர்யா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் ‘இது வெறும் புலி இல்லடா… பாயும் புலி ஆடியோ ரிலீஸ்டா…. இது கொட்டை எடுக்காத புலிடா…. புரட்சித்தளபதியின் புலிடா…” சகட்டுமேனிக்கு அடுக்கு மொழியில் விஷாலை வாழ்த்தியிருந்தார்.

ஆனால் அதே தேதியில் தான் விஜய்யின் ‘புலி’ படத்தின் இசைவெளியீட்டு விழாவும் நடந்ததால், விஜய்யை மறைமுகமாக ஆர்யா தாக்குவதாக நினைத்த விஜய் ரசிகர்கள் ஆர்யாவுக்கு தங்களது கண்டனங்களையும் கூடவே விஷாலின் புலி படத்திற்கு எதிரான கருத்துக்களையும் பரப்ப ஆரம்பித்துவிட்டார்கள்.

இதை கேள்விப்பட்ட விஷால், இதென்னடா வம்பா போச்சு.. இந்த ஆர்யாவை விழாவுக்கு கூப்பிட்டாலும் சிக்கல்ல மாட்டி விட்றான்.. கூப்பிடலைன்னாலும் வெளிய இருந்தே சூனியம் வச்சுடுறான் என பொருமிக்கொண்டு இருக்கிறாராம்.