சரத் வேண்டாமாம்..! விஷாலுக்காக விழாவை புறக்கணித்த வரலட்சுமி..!

சில தினங்களுக்கு முன் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள ‘இது என்ன மாயம்’ படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது. இந்தப்படத்தை ராதிகா, சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த விழாவில் ராதிகாவின் மகளான ரேயான் மட்டும் தான் பரபரப்பாக அங்கே இங்கே ஓடிக்கொண்டிருந்தார். அவரைத்தான் மேடையில் ஏற்றிக்கூட கௌரவித்தார்கள்.

ஆனால் சரத்குமாரின் மகளான வரலட்சுமி அந்த விழாவில் கலந்துகொள்ளவே இல்லை. சரி பாலாவின் ‘தாரை தப்பட்டை’ படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறாரோ என்று பார்த்தால், பாலாவே இங்கே இருக்கும்போது படப்பிடிப்பு எப்படி நடைபெறும்..? அன்றைய தினம் காலையிலே நடைபெற்ற ஜோதிகா பட விழாவில் பாலா கலந்துகொண்டதன் மூலம் அதுவும் உறுதியாயிற்று..

பின் ஏன் விழாவுக்கு வரவில்லை என்றால் விஷாலுக்காகத்தான், அதாவது விஷால் பக்கம் தான் ஆதரவாக இருப்பதாக காட்டும் விதமாகத்தான் விழாவை புறக்கணித்துவிட்டாராம் வரலட்சுமி. நடிகர் சங்க பிரச்சனையில் சரத்குமாருக்கு எதிராக தொடர்ந்து விஷால் குரல் கொடுத்து வருவதும், இதில் விஷாலுக்கு ஆதரவாக வரலட்சுமி நிலைப்பாடு எடுத்துள்ளதும் தெரியும் தானே.. அதன் பிரதிபலிப்பாகத்தான் விழாவில் வரலட்சுமி கலந்துகொள்ளவில்லை என்றே சொல்லப்படுகிறது.