முருகதாஸ் – விஜய் & கோ-வை கலாய்த்த சந்தானம்..!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இதுவரை சந்தானம் நடித்ததில்லை.. தற்போது கிட்டத்தட்ட முழுநேர ஹீரோவாக மாறிவிட்டதால் இனிமேலும் அவர் டைரக்சனில் சந்தானம் நடிக்க வாய்ப்பு இருக்கிறதா என்றும் தெரியவில்லை. அதேபோல இனிமேல் விஜய் கூடவும் காமெடியனாக இணைந்து நடிப்பார் எனவும் தோன்றவில்லை..

அதனால் தானோ என்னவோ ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ (வி.எஸ்.ஓ.பி) படத்தின் ட்ரெய்லரை பார்த்ததுமே இந்த எண்ணம் தான் பலரின் மனதிலும் ஓடியிருக்கும்.. ‘கத்தி’ படத்தில் விஜய் டயலாக்கை இப்படி கலாய்த்து சந்தானம் பன்ச் பேசியிருக்கிறார் என்பது கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

கத்தியில் கம்யூனிசம் பற்றிய கேள்விக்கு, “நமக்கு பசி அடங்கினதுக்கு அப்புறமும் நாம் சாப்பிடுற அடுத்த இட்லி இன்னொருத்தருடையது” என விஜய் பதில் அளித்திருப்பார். ‘வி.எஸ்.ஓ.பி’ படத்தில் அந்த டயலாக்கையே ‘நீ போதையானதுக்கு அப்புறம் குடிக்கும் ஒவ்வொரு பீரும் இன்னொருத்தனுக்கு சொந்தமானது” என மாற்றிவிட்டார் சந்தானம். கம்யூனிசம் என வந்தபின்பு இட்லி, பீர் எல்லாம் ஒன்றுதான் என நினைத்திருப்பாரோ..?