வீண் வேலையில் இறங்கப்போகிறாரா கௌதம் மேனன்..?


ஒரு படத்தை ஹிட் கொடுத்த சில இயக்குனர்கள் பல வருடங்கள் கழித்து தங்களுக்கு வாய்ப்பே கிடைக்காத நிலையில் பரபரப்புக்காக கையில் எடுக்கும் ஆயுதம் தான் அந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முயற்சிப்பது. இரண்டாம் பாகத்திற்கு வாய்ப்பு இருக்கிறதோ இல்லையோ, வம்படியாக ஒரு கதையை தயார் செய்து படத்திற்கு பதிலாக பப்படத்தை கொடுத்து பல்பு வாங்கிய கதைகள் நிறைய உண்டு.

ஆர்.கே.செல்வமணியின் ‘புலன் விசாரணை-2’, அர்ஜூனின் ‘ஜெய்ஹிந்த்-2’ எல்லாம் இப்படி வெளியாகி மண்ணை கவ்வியவைதான்.. ஆனால் இதில் லாரன்ஸ், சுந்தர்.சி போன்று சூட்டோடு சூடாக இரண்டாம் பாகம் எடுத்து காசு பார்க்கும் சில விதிவிலக்கு இயக்குனர்களும் உண்டு..

அந்தவகையில் கௌதம் மேனன் தனது சூப்பர் ஹிட் படமான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் பார்ட்-2வை எடுக்க இருப்பதாகவும் அதில் சிம்புவே நடிக்கப்போவதாகவும் சொல்லப்படுகிறது.. ஏற்கனவே சிம்புவை வைத்து இயக்கிவரும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்திலேயே சிம்புவால் படாதபாடு பட்டு வருகிறார் கௌதம் மேனன்.. இந்த நிலையில் மீண்டும் அதுபோன்ற வீண் வேலையில் எல்லாம் தேவையில்லாமல் இறங்கமாட்டார் என்கிறார்கள் கௌதம் மேனன் நலம் விரும்பிகள்.