அகரம் பவுண்டேஷனில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்ற 2 டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் புதிய பட பூஜை


தொடர்ந்து குடும்பங்கள் கொண்டாடும் தரமான வெற்றிப்படங்களை தந்து வரும் 2 டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் அடுத்த பட பூஜை, சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷனில் இன்று காலை (நவம்பர் 28) மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட்டது.

மிக வித்தியாசமான படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் நடிகர்கள் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி கூட்டணியில் சூரி, கலையரசன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்களும் இணைந்து நடிக்கிறார்கள். கிராமியப் பின்னணியில் உறவுகளின் வலிமையைச் உரக்கச்சொல்லும் விதமாக இந்தப் படம் உருவாகிறது. இயக்குநர் இரா.சரவணன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்க, தமிழ்த் திரையுலகில் தனி முத்திரை பதித்து வரும் ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, இளைய தலைமுறையின் நாடித்துடிப்புகளை தன் இசையால் கட்டிப் போட்டு வைத்திருக்கும் டி.இமான் இசை அமைக்க, தமிழ்த் திரையுலகின் முக்கிய படத் தொகுப்பாளர் ரூபன் எடிட்டிங் பணியைக் கவனிக்க, முஜூபுர் ரஹ்மான் கலை இயக்குநராகப் பங்கேற்கிறார். இந்தப் படத்தின் முழுப் படப்பிடிப்பும் புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்டப் பகுதிகளில் திட்டமிடப்பட்டிருக்கிறது.

இவ்விழாவில் நடிகர் திரு.சிவகுமார், 2 டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனரும் தயாரிப்பாளருமான சூர்யா, கார்த்தி, சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி, சூரி, கலையரசன், இமான், 2 டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் CEO ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், இயக்குனர்கள் இயக்குனர்கள் பாண்டிராஜ், கல்யாண், பிரெட்ரிக், சி கௌதமராஜ், டீ. ஜே ஞானவேல், குகன் சென்னியப்பன், தயாரிப்பாளர் S R பிரபு, ஒளிப்பதிவாளர்கள் ரவி வர்மா ராம்ஜி, கதிர், விநியோகஸ்தர் B.சக்திவேலன் மற்றும் பின்னணி பாடகர் கிரிஷ் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.