காதல் சுகுமார் இயக்கத்தில் உருவாகும் ‘9 கிரகங்களும் உச்சம் பெற்றவன்’!

‘காதல்’ படம் மூலம் நகைச்சுவை நடிகனாக பிரபலமான ‘காதல்’ சுகுமார் ‘திருட்டு விசிடி’, ‘சும்மாவே ஆடுவோம்’ ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து மூன்றாவதாக இயக்கும் படம் ‘9 கிரகங்களும் உச்சம் பெற்றவன்’.

மதுரை ஆர்.ரத்தினவேல் பாண்டியன் மற்றும் கோவை கே.கனகராஜ் ஆகியோரின் நல்லாசியுடன் இந்தப்படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு துவக்கவிழா நேற்று மாலை கோவையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரையுலக கலைஞர்களும் கோவையை சேர்ந்த பிரபலங்களும் கலந்துகொண்டனர்.

இந்தப்படத்தின் கதாநாயகனாக ‘பட்டதாரி’ படத்தில் நடித்த அபிசரவணன், விஷ்ணுப்ரியன் மற்றும் காதல் சுகுமார் ஆகியோர் நடிக்கின்றனர்.கதாநாயகிகளாக கன்னிகா ரவி, ஸ்ருதி, ஹர்ஷதா ஆகியோர் நடிக்கிறார்.

இவர்களுடன் தம்பிராமையா, எம்.எஸ்.பாஸ்கர், சௌந்தர்ராஜன், கோவை விஷ்ணு, ரமா, சரவணன் சுப்பையா, அசோக் பாண்டியன், டேவிட் சாலமன், சத்யா, மனோ, ஹர்ஷன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.. ‘பொறம்போக்கு’ படத்திற்கு இசையமைத்த வர்ஷன் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.

வாழக்கையில் அடுத்தடுத்து தொடர்ந்து மிகப்பெரிய இழப்புகளை சந்திக்கும் ஒருவன் அதில் இருந்து எப்படி மீள்கிறான் என்பதுதான் இந்தப்படத்தின் கதை. கேரளாவில் ஆரம்பித்து கோவையில் முடியும் இந்தப்படத்தின் கதை ஏழு நாட்களுக்குள் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பாக உருவாகிறது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு கேரளா மற்றும் கோவை ஆகிய பகுதிகளில் நடைபெறுகிறது..

‘காதல்’ சுகுமாரின் சொந்த நிறுவனமான காதல் ஸ்டுடியோஸ்யுடன் கே.யூ.தேவர் பிலிம்ஸ்-ன் U.சாய்சரவணன் மற்றும் பாரம்பரியம் மூவிஸ்-ன் விஜய் ஆனந்த் ஆகியோரும் இணைந்து இந்தப்படத்தை தயாரிக்கிறார்கள்.

சில வருடங்களுக்கு முன் விக்ரமன் இயக்கத்தில் வெளியான சூர்யா நடித்த ‘உன்னை நினைத்து’ படத்தில் நகைச்சுவை நடிகர் சார்லி பேசிய ‘9 கிரகங்களும் உச்சம் பெற்றவன்’ என்கிற புகழ்பெற்ற வசனம் தான் இந்தப்படத்தின் டைட்டிலாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இசை- வர்ஷன் ( Varsan )
ஒளிப்பதிவு – ஜீன்ஸன் லோனப்பன் ( Jinson Lobnappan )
படத்தொகுப்பு – சதிஷ் பி கோட்டே ( Sathis B.Kottay )
ஆக்சன் – மிரட்டல் செல்வா ( Mirtal Selva )