பிரச்சினைக்குப் பயந்து 4வது முறையாக பெயரை மாற்றிக்கொண்ட சர்ச்சை நாயகி!

தமிழ் சினிமாவில் காதல் திருமணம் போன்ற பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நடிகை ஒருவர் தற்போது நான்காவது முறையாக தனது பெயரை மாற்றியுள்ளார்.

தமிழ் சினிமா முதல் பாலிவுட் சினிமா வரை அறிமுகமாகும் ஒவ்வொரு நடிகரும், நடிகைகளும் தங்களது இயற்பெயரை மாற்றி வைத்துதான் சினிமா உலகில் எண்ட்ரியாகின்றனர். இதற்கு ரஜினிகாந்த் முதல் தற்போது அறிமுகமாகின்ற புதுமுக நடிகர் நடிகைகள் வரை பல உதாரணங்கள் உள்ளன. திரை பிரபலங்கள் ஒரு கட்டத்தில் சினிமா உலகில் உச்ச நிலைமை அடைந்தவுடன் சினிமா பெயரையே தனது இயற்பெயராக மாற்றிக்கொள்கின்றனர். அதற்கு ஜோசியம், நியூமராலஜியும் ஒருவகை காரணம் உண்டு.

ஆனால் இங்கே நாம் பார்க்க போகிற நடிகை ஒவ்வொரு முறையும் தனது பெயரை மாற்றுவதற்கு ஏதோ ஒரு தனிப்பட்ட பிரச்சனை காரணமாக இருந்திருக்கிறது. அப்படி தற்போது நான்காவது முறையாக பெயர் மாற்றிக் கொண்டிருப்பவர்தான் நடிகை அதிதி மேனன். கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், அங்குள்ள இடுக்கி மாவட்டத்தில் பிறந்தவர். அவருடைய சொந்த பெயர் சாய்னா சந்தோஷ். அந்த பெயரில்தான் மலையாள தொலைக்காட்சியில் சின்னத்திரை நடிகையாக தனது கலைப் பயணத்தை தொடங்கினார். அதில் சீரியல் வில்லியாக அறிமுகமான அவருக்கு அங்கு பிரச்சனைகள் தொடங்கவே பின்பு தமிழ் திரையுலகம் பக்கம் தாவினார்.

தமிழில் முதன்முறையாக நெடுநல்வாடை என்ற படத்தில் ஆதிரா சந்தோஷ் என்ற பெயரில் அறிமுகமானார். அந்த படத்தின் இயக்குநருக்கும் அவருக்கும் பிரச்சனை ஏற்படவே அந்த படத்திலிருந்து ஆதிரா சந்தோஷ் விலகினார். பின்னர் வேறு ஒரு நடிகையை வைத்து நெடுநல்வாடை படத்தை முடித்தனர் என்பது தனி கதை.

அதனைத் தொடர்ந்து பட்டதாரி என்ற படத்தில் இளம் நடிகர் அபி சரவணனுடன், அதிதி மேனன் என்ற பெயரில் ஜோடி சேர்ந்தார். சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் அபி சரவணனை காதலித்து, மணமுடித்து ஜோடி சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முந்தைய படங்களைக் காட்டிலும் பட்டதாரி படம் இவருக்கு ஓரளவு பெயரை பெற்று தந்தது. பின்பு தினேஷுடன் களவானி மாப்பிள்ளை என்னும் படத்தில் அதிதிமேனன் நடித்தார்.

நடிகர் அபி சரவணன் மதுரையைச் சேர்ந்தவர். அவர் பல்வேறு பொதுநலத் தொண்டுகள் செய்து வருபவர். முகநூல் பக்கம் மூலம் பல்வேறு தரப்பினருக்கும் உதவிகளைச் செய்து வருகிறார். புயல், வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களில் பாதிக்கப்படும் மக்களைத் தேடிச் சென்று பல உதவிகளைத் தொடர்ந்து செய்து வருகிறார்.

அபி சரவணன், அதிதி மேனன் காதல் திருமணம் கடந்த பிப்ரவரி மாதம் மதுரையில் ரகசியமாக நடந்துள்ளது. திருமணத்தில் இரு வீட்டாரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். திருமணம் ஆன தகவல் கசிந்தால், அதிதியின் சினிமா வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படும் என்பதால், திருமணம் பற்றி வெளிப்படையாக அறிவிக்காமல் சென்னையில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் அதிதீ மேனன் தன்னை காதலித்து திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக அபி சரவணன் புகார் ஒன்றை தெரிவித்தார். ஆனால், நான் அபியை காதலித்னே தவிர… திருமணம் செய்யவில்லை என அதிதிமேனன் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. பத்திரிகையாளர்களைச் சந்தித்து அதிதி நீண்ட விளக்கம் அளித்தார். அதில் சமூக சேவை என்ற பெயரில் பலரிடம் பணம் வாங்கி அபி ஏமாற்றி வருகிறார் என்று யாரோ எழுதிக் கொடுத்ததை வாசிப்பது போன்று பகிரங்கமாக புகார் தெரிவித்தார்.

பதிலுக்கு அபியும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ, போட்டோக்களை வெளியிட்டார். தான் செய்து வரும் சமூக சேவையின் மீது களங்கம் கற்பித்த அதிதியைக் கண்டித்ததோடு, இதுவரை அவர் செய்த உதவிகள், யாரிடம் இருந்து எல்லாம் பணம் பெறப்பட்டது? அவை எப்படி உதவிகளாக மக்களுக்கு வழங்கப்பட்டது? என்று நீண்ட விளக்கம் அளித்தார். வங்கி ஸ்டேட்மெண்ட்களையும் பத்திரிகையாளர்களிடம் காண்பித்து கண் கலங்கினார்.

இதற்கிடையில், அபி, அதிதி தம்பதியின் விவாகரத்து வழக்கு மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கின் மீதான விசாரணை கடந்த இரு தினங்களுக்கு முன் நடந்தது. அப்போது அபி மற்றும் அதிதி ஆகியோர் கோர்ட்டில் ஆஜரானார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி, செப்டம்பர் மாதம் 27ம் தேதி மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும், தம்பதியருக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

காதல் திருமண வாழ்க்கை கேள்விக்குறியானதால் மன உளைச்சலோடு போராடிக் கொண்டிருக்கும் அபிசரவணன், தொடர்ந்து சமூக சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். சமீபத்தில் கூட அசாம் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று உதவினார். இதற்காக மலேசியாவில் அவருக்கு விருது வழங்கப்பட்டது. அதோடு இரு படங்களில் நடித்து முடித்துள்ளார். தன்னுடைய இயல்பையும், பெயரையும் மாற்றாமல் சினிமாவில் அபி பயணிக்கும் அதே நேரத்தில், அதிதியோ, தற்போது வேறு ஒருபெயரை மாற்றிக் கொண்டு மலையாள படங்களில் நடிக்க தொடங்கியிருக்கிறார்.

ஏற்கனவே 3 முறை பெயரை மாற்றியிருக்கும் அதிதி, இந்த காதல் திருமண பிரச்சினையைப் பற்றி கவலை கொள்ளாமல் இருப்பதோடு, வழக்கபோல பிரச்சினைக்குப் பிந்தைய பெயர் மாற்றம் போல இப்போது மிர்னா மேனன் என்று தனது பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறார். இந்த பெயரில்தான் தற்போது மோகன் லாலுடன் மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

திரையுலகம் தினம் தினம் பலருக்கும் பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த செய்தியும் ஓர் உதாரணம்தான்!