மகேஷ்பாபு – காஜல் அகர்வால் – சமந்தா – பிரனிதா நடிக்கும் ‘அனிருத்’!

சித்தாரா எண்டர்டைன்மெண்ட்ஸ் வழங்க சுவாதி, வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீத்தால, வெங்கட்ராவ் தயாரிக்கும் படம் “ அனிருத் “

பத்ரகாளி பிலிம்ஸ் ஏற்கனவே செல்வந்தன், பிரபாஸ் பாகுபலி, இது தாண்டா போலீஸ், மகதீரா, புருஸ்லீ, எவண்டா உட்பட ஏராளமான படங்களை தயாரித்து வெளியிட்டிருக்கிறது. தெலுங்கில் பிரம்மோற்சவம் என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படமே தமிழில் “ அனிருத் “ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடித்துள்ளார். நாயகிகளாக காஜல்அகர்வால், சமந்தா, பிரனிதா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் சத்யராஜ், நாசர், ரேவதி, ஷாயாஜி ஷிண்டே, ஜெயசுதா, முகேஷ்ரிஷி ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – ரத்னவேலு / இசை – மிக்கி ஜே. மேயர்

பாடல்கள் – கம்பம் கர்ணா, பாசிகாபுரம் வெங்கடேசன், அம்பிகா குமரன், திருமலை சோமு, முருகானந்தம், யுவகிருஷ்ணா, குலராஜா. இணை தயாரிப்பு – சத்யசீத்தால, வெங்கட்ராவ்

தயாரிப்பு – பத்ரகாளி பிரசாத்

இயக்கம் – ஸ்ரீகாந்த்

வசனம் மற்றும் ஒருங்கிணைப்பு – A.R.K.ராஜராஜா

படம் பற்றி A.R.K.ராஜராஜா கூறியதாவது..

உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் உறவுகளாலும், அன்பினாலும் பின்னப் பட்டது தான். அப்படி குடும்ப உறவுகளை மையமாக வைத்து வெளியாகும் படங்களுக்கு ரசிகர்களிடையே எப்போதும் வரவேற்பு இருக்கும். தனது உறவுகள் பசித்திருக்க அடுத்தவர்க்கு தானம் செய்வதை விட மோசமான காரியம் வேறேதும் இல்லை ! என்ற நபிகள் நாயகத்தின் பொன் மொழிதான் இந்த படத்தின் கதை.

நம்மீது அன்பு செலுத்தி நம் அருகிலேயே இருக்கும் உறவுகளை நாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் அவர்கள் நம்மை விட்டு போன பிறகு அவர்களை நினைத்து வருத்தப் படுவோம். அப்படி அன்பான ஒரு உறவை இழந்த நாயகன் தனது ஏழு தலைமுறை உறவுகளையும் தேடி கண்டுபிடிப்பதுதான் படத்தின் திரைக்கதை !

தீபாவளி, பொங்கல் என அனைத்து பண்டிகைகளில் வரும் சந்தோசம் மொத்தமாக ஒரே நேரத்தில் வந்தால் எப்படி இருக்குமோ அப்படி குடும்பத்தில் உள்ள அனைவரும் நெகிழ்வோடும் பார்க்க கூடிய படம் இது என்றார் A.R.K.ராஜராஜா.