‘ஸ்ரேயா, பூர்ணா,பூனம் பாஜ்வா’வுடன் ஜோடி சேர துடிக்கும் புதுமுகம் ஏ.எல்.சூர்யா..!

‘அனிதா பத்மா பிருந்தா’ என்கிற பெயரில் ஒரு புதிய படம் தயாராகிறது. ஏ.எல்.சூர்யா எழுதி இயக்கி நாயகனாகவும் நடிக்கிறார்.

திரையுலகில் இசையமைப்பாளராக வேண்டும் என்கிற வேட்கையில் இசை பயின்று ஓரிரு படங்களுக்கு இசையமைத்துள்ளார் ஏ.எல்.சூர்யா.அப்படங்கள் வெளியாகவில்லை. அதனால் அவர் சோர்ந்துவிடவில்லை. தம் உழைப்பால், தன்னம்பிக்கை சொற்பொழிவாளராக உயர்ந்தார். அவரால் ஏராளமானோர் பயனடைந்தனர்.

தம் உள்ளுணர்வின் உந்துதலில் ஒவ்வொரு செயலையும் செய்வதாகச் சொல்லும் அவருக்கு, ஒருநாள் நடிகை ஸ்ரேயாவுடன் காதல் பாடல் பாடுவது போலக் கனவு வந்ததாம்.

உடனே தன் எண்ணங்களை எழுத்தாக்கினார். அது ‘அனிதா பத்மா பிருந்தா’ எனும் பெயரில் 560 பக்கங்கள் கொண்ட நாவலாக விரிந்தது.

அந்த நாவலை அப்படியே திரைப்படமாக்கும் முயற்சியில் இப்போது ஈடுபட்டிருக்கிறார்.

கனவில் கண்டது போல், ஸ்ரேயாவை நாயகியாக்கிவிடுவது எனும் முயற்சியில் இருக்கிறார். ஸ்ரேயா மட்டுமின்றி பூர்ணா,பூனம் பாஜ்வா ஆகியோரையும் ஒப்பந்தம் செய்யவிருப்பதாகச் சொல்கிறார்கள்.

தன்னுடைய பி பாசிட்டிவ் நிறுவனம் சார்பாக ஏ.எல்.சூர்யாவே தயாரிக்கவிருக்கும் இப்படம் விரைவில் தொடங்கவிருக்கிறது.