‘கொரோனா கொரோனா வராதே..’; பஷீர் உருவாக்கிய விழிப்புணர்வு பாடல்..!

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் பஷீர்.. அதிமுகவை சேர்ந்த இவர் பொதுவாகவே சமூக அக்கறையுடன் பல செயல்களில் ஈடுபட்டு வருகிறார். தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவுக்குள்ளும் ஊடுருவியுள்ளது. இதுகுறித்து அரசாங்கம் ஒருபக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் தன் பங்கிற்கு கொரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்றை வீடியோவாக உருவாக்கியுள்ளார் பஷீர்.

“கொரோனா கொரோனா வராதே.. எங்களை நீ என்றும் தொடாதே ” என்கிற இந்தப்பாடலை அறிவுமதி எழுதியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானிடம் உதவியாளராக இருக்கும் சஜித்துல்லா என்பவர் இசையமைத்துள்ள இந்தப்பாடலை பஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐந்து விதமான பின்னணிகளும் இடம்பெறுமாறு இரண்டே நாட்களில் அற்புதமாக படமாக்கியுள்ளார் பஷீர்.

இந்தப்பாடலில் பவர்ஸ்டார் உள்ளிட்ட 25 நட்சத்திரங்கள் பங்கேற்று நடித்துள்ளனர். இவர்கள் அத்தனை பேருக்குமே கொரோனா சோதனை செய்துவிட்டு அதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திவிட்டு அதன்பின்னரே இந்த பாடலை படமாக்கியுள்ளார் பஷீர்.

இன்று மாலை வெளியாகியுள்ள இந்த விழிப்புணர்வு பாடலில் தமிழக அரசுக்கும் தன்னலம் பாராது மக்களுக்காக இரவு பகலாக உழைத்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் பஷீர்..