ஷங்கர் மகாதேவன் மகனை அறிமுகம் செய்யும் D இமான்!


பல புதிய திறமைகளை இசைத்துறைக்கு அறிமுகப்படுத்துவதில் மற்ற இசையமைப்பாளர்களைக் காட்டிலும் முன்னணியில் இருப்பவர் D இமான். திறமைகள் எங்கிருந்தாலும் தேடிக்கண்டுபிடித்து தன் பாடல்களில் பயன்படுத்திக்கொள்பவர்.

சமீபத்தில் குக்கிராமத்தில் பாடல்கள் பாடி பிரபலமடைந்த கண்தெரியாத கலைஞர் குருமூர்த்தியை தேடிக்கண்டுபிடித்து அவரது கனவை தன் படத்தில் பாடல் பாடச் செய்ததன் மூலம் நனவாக்கியுள்ளார்.

இதனையடுத்து தற்போது இந்திய அளவில் மிகப்பிரபல பாடகர் மற்றும் இசையமைப்பாளரான ஷங்கர் மாகாதேவனின் புதல்வர் சிவம் மகாதேவனை தமிழில் பாடகராக அறிமுகப்படுத்துகிறார். ஜீவா நடிக்கும் “சீறு” படத்தில் விவேகா வரிகளில் பாடகராக அறிமுகம் ஆகிறார் சிவம் மகாதேவன்.

இசையமைப்பாளர் D இமான் இது பற்றி கூறியதாவது…இசைக்கு பெயர் போன குடும்பத்தில் ஒருவரை அறிமுகப்படுத்துவதும் அவருடன் வேலை பார்ப்பதும் பெருமைமிகு தருணமாகும். தந்தையின் அடியொற்றி சிலர் வாய்ப்பு பெறுவார்கள் ஆனால் சிவம் இயல்பிலேயே நல்ல குரல்வளம் படைத்தவர் தனித்திறமை என்பது அவரது ஆத்மாவில் கலந்திருக்கிறது. தமிழக இசைத்துறை அவரது குரலை கொண்டாடும். எனது ஆசை ஒரு நாள் ஷங்கர் மகாதேவன் மற்றும் அவரது மகன்கள் சித்தார்த், சிவம் மூவரையும் என் இசையில் பாடவைக்க வேண்டுமென்பதாகும். அதுவும் கூடியவிரைவில் நனவாகும்.

“சீறு” குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் படமாக உருவாகி வருகிறது. வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி வேலன் இப்படத்தை தயாரிக்கிறார். ரத்தன் சிவா இயக்கியுள்ளார். ரியா சுமன் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். நவ்தீப் வில்லன் பாத்திரத்தில் நடிக்கிறார். பிரசன்னா S குமார் ஒளிப்பதிவு செய்ய லாரன்ஸ் கிஷோர் எடிட்டிங் செய்கிறார். K சம்பத் திலக் கலை இயக்கம் செய்துள்ளார். ராஜு சுந்தரம் நடன அமைப்பு செய்ய பாடல்களை விவேகா எழுதியுள்ளார். படத்தின் இறுதிப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.