வித்தியாசமான பழிவாங்கும் பின்னணியில் உருவாகும் ‘துப்பாக்கியின் கதை’


இயக்குநர் விஜய் கந்தசாமி இயக்கும் இந்தப் படத்தில் சிவநிஷாந்த் என்பவர் ஹீரோவாக நடிக்க, பெங்களூருவை சேர்ந்த நீருஷா என்பவர் கதாநாயகியாக நடிக்கிறார்.

மேலும் டேனியல், ஆர்.எஸ்.சிவாஜி, ஜார்ஜ், மிப்புசாமியுடன் இலங்கை நடிகர் லால்வீர்சிங் முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார்.

சஞ்சனா மற்றும் தெலுங்கு நடிகர் ஸ்ரீஹர்ஷா ஆகியோரும் நடிக்கின்றனர்.சாய் பாஸ்கர் என்பவர் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.

ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் “துப்பாக்கியின் கதை” குடும்பத்துடன் பார்க்கக் கூடிய, இளைஞர்கள் ரசிக்கக்கூடிய படமாக உருவாகி வருகிறது.

பழிவாங்கும் கதையம்சத்துடன் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதோடு, எப்படி பழி வாங்குகிறார்கள் என்கிற விதத்தில் வித்தியாசம் காட்டி உருவாக்கப்பட்டிருக்கிறது.
படத்தின் கதை உண்மையிலேயே ஒருவரது வாழ்க்கையில் நடந்த நிகழ்வை மையப்படுத்தி அதன் தாக்கத்தில் உருவான கதை தான்.
படம் பார்க்கும்போது இந்த நிகழ்வு எங்கே நடந்தது, யாருக்கு நடந்தது என்பதை ரசிகர்கள் நன்றாகவே தெரிந்து கொள்வார்கள் என்கிறார் இயக்குநர் விஜய் கந்தசாமி.
கோவையில் முதல்கட்ட படப்பிடிப்பை ஒரே மூச்சில் 35 நாட்களில் நடத்தி முடித்துவிட்டு இறுதிக் கட்ட படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்ல இருக்கின்றனர் படக்குழுவினர்.
இந்த படத்தில் 2 பாடல் காட்சிகளில் ஒன்று வெளிநாட்டில் படமாக்கப்பட இருக்கிறது.
ஒருநாள் கோவையில் இப் படத்தின் காட்சி படமாக்கிக் கொண்டிருந்தபோது துணை நடிகர் ஒருவரின் கழுத்தில் இருந்து செயினை பறித்துக் கொண்டு ஹீரோ ஓடுவது போலவும் அந்த நடிகர் கூச்சலிடுவது போலவும் யாருக்கும் தெரியாமல் கேமராவை மறைத்து வைத்து படமாக்கினார்கள்.
ஆனால் அதை உண்மை என்று நினைத்த அங்கிருந்த பொதுஜனம் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் ஹீரோவை உண்மையான திருடன் என்று நம்பி விரட்டிச் சென்றுள்ளார்.
ஆனால் எதிர்பாராத விதமாக அந்த நபர் விபத்தில் சிக்கி, அவரது காலில் முறிவு ஏற்பட்டு, அதன்பின்னர் படக்குழுவினர் சில லட்சங்கள் வரை அவரது சிகிச்சைக்காக செலவு செய்துள்ளனர்.
இன்னும் இதுபோல பல சுவாரஸ்ய நிகழ்வுகள் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது நடந்துள்ளன என்கிறார் இயக்குநர் விஜய் கந்தசாமி.
வரும் டிசம்பர் மாத இறுதியில் கிறிஸ்துமஸுக்கு முன்பாக இந்தப்படத்தை வெளியிடத் திட்டுமிட்டுள்ளார்கள்.