விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் நடிக்கும் “இன்று நேற்று நாளை”

மக்களை மகிழ்விக்கும் ஜனரஞ்சகமான படங்களையும், சிறந்த கதை களம் உள்ள வெற்றி படங்களையும் உருவாக்குவதில் கைதேர்ந்த தயாரிப்பு நிறுவனங்கள் சீ.வீ.குமாரின் “திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட்” மற்றும் கே ஈ ஞானவேல் ராஜாவின் “ஸ்டுடியோ க்ரீன்”.

அட்டகத்தி, பிட்சா, சூதுகவ்வும், வில்லா (பிட்சா 2), மூண்டாசுப்பட்டி, சரபம், எனக்குள் ஒருவன் உள்ளிட்ட ஏராளமான வெற்றி படங்களை தயாரித்த திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் கே ஈ ஞானவேல் ராஜாவின் “ஸ்டுடியோ க்ரீன்” தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து பிரம்மாண்டமான முறையில் புதிய கதை களத்துடன் தயாரித்துள்ள படம் தான் “இன்று நேற்று நாளை”.

சொந்த தொழில் தான் செய்வேன் எவன் கிட்டயும் கைகட்டி வேலை செய்யமாட்டேன் என்ற கொள்கையில் வாழும் இளங்கோ கேரக்டரில் விஷ்ணுவும், அரைகுறை ஜோதிடனாக பிழைப்பு நடத்தும் புலிவெட்டி ஆறுமுகம் கேரக்டரில் கருணாகரன். இவர்கள் இருவரும் தங்கள் கையில் கிடைக்கும் டைம் மிஷினை வைத்துக்கொண்டு ஏற்படுத்தும் பிரச்சனையை அதே டைம் மிஷின் உதவியோடு தீர்ப்பதே “இன்று நேற்று நாளை” படத்தின் கதை.

‘விஷ்ணுவிற்கு ஜோடியாக ‘அமரகாவியம்’ படத்தில் நடித்த மியா ஜார்ஜ் நடிக்கிறார். இப்படத்தை ரவி இயக்கி வருகிறார். ஹிப்ஹாப் தமிழா புகழ் ஆதி இசையமைத்து வருகிறார். வசந்த் ஒளிப்பதிவை செய்கிறார்.

இப்படத்தின் இசை வெளியிடு இந்த மாதம் (ஜீன்) 12 அன்று நடைபெறவுள்ளது.