நயன்தாராவின் 65வது படத்திற்கு சூப்பர்ஸ்டார் ரஜினியின் பட டைட்டில் – நெற்றிக்கண்


தொடர்ந்து வித்தியாசமான கதைகளில் வெற்றிப்படங்களாக தந்துவரும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தன் 65 வது படத்தில் மிகவும் வித்தியாசமான கதையம்சத்துடன் கலக்க வருகிறார். “நெற்றிக்கண்” எனும் தலைப்பிடப்பட்ட இப்படத்தின் பூஜை 15.9.2019 அன்று படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு மிக எளிமையாக நடைபெற்றது.

புதுமை இயக்குநர் விக்னேஷ் சிவன் இப்படத்தை தனது Rowdy Pictures சார்பில் முதல் படமாக தயாரிக்கிறார். சித்தார்த், ஆண்ட்ரியா நடிப்பில் வெற்றிபெற்று கவனம் ஈர்த்த “அவள்” படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இப்படத்தினை இயக்குகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட வெற்றிப்படமான “நெற்றிக்கண்” படத்தலைப்பு இப்படத்திற்கு கிடைத்ததில் மொத்த படக்குழுவும் பெரும் மகிழ்ச்சியில் திளைத்து வருகிறது. Rowdy Pictures ன் முதல் படைப்பாக உருவாகும் “நெற்றிக்கண்” படத்தின் மற்றுமொரு சிறப்பு என்னவெனில் இயக்குநர் சிகரம் பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனத்தின் முதல் படைப்பும் “நெற்றிக்கண” ஆகும்.

இது பற்றி விக்னேஷ் சிவன் கூறுகையில்

எங்கள் மொத்தப் படக்குழுவும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கும் மறைந்த இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் அவர்களுக்கும் கவிதாலயா நிறுவனத்தின் தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமி அவர்களுக்கும் பெரும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

மேலும் நயன்தாராவை “ஐயா” படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியதும் கவிதாலயா நிறுவனம் என்பதையும் இந்நேரத்தில் நினைவு கூர்ந்து நன்றி கூறுகிறோம். இயக்குநர் மிலிந்த் ராவ்வின் “நெற்றிக்கண்” திரைக்கதை அவரது முந்தைய படமான “அவள்” படத்தினைப் போலவே ஒரு அற்புதமான திரில்லராக அமைந்திருக்கிறது. “அவள்” படத்தினை போலவே இப்படமும் அனைவரும் விரும்பும் படமாக இருக்கும் என்றார்.

படத்தின் மற்ற நடிகர்கள் தேர்வுதற்போது நடந்து வருகிறது.