பழம்பெரும் நடிகர் டி எஸ் ராகவேந்திரா காலமானார்

நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் டி.எஸ்.ராகவேந்திரா. இவரது இயற்பெயர் விஜயரமணி. விஜயரமணி என்ற பெயரிலேயே ஆரம்பக்காலங்களில் இவர் திரைப்படங்களில் பின்னணி பாடி வந்தார். பின்னர் விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1984-ம் ஆண்டு வெளியான வைதேகி காத்திருந்தாள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதில் ரேவதியின் தந்தையாக நடித்திருந்தார்.

தந்துவிட்டேன் என்னை, சிந்து பைரவி, விக்ரம், சொல்லத்துடிக்குது மனசு, கற்பூர முல்லை, இளையவன் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். 1980-இல் வெளிவந்த ‘யாக சாலை’ என்ற படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் இன்று காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.